ராஜ்பவன் செல்ல பெண்கள் அச்சம் ஆளுநர் குறித்து மம்தா அவதூறாக பேசவில்லை: கொல்கத்தா ஐகோர்ட்டில் வாதம்

கொல்கத்தா: மேற்கு வங்க ஆளுநர் ஆனந்த போஸ் மீது ஆளுநர் மாளிகையில் பணியாற்றும் பெண் ஊழியர் ஒருவர் கடந்த மே 2ம் தேதி மானபங்க புகார் அளித்தார். இதுதொடர்பாக கொல்கத்தா போலீசார் விசாரித்தனர். அப்போது பொதுக்கூட்டத்தில் பேசிய அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி, ‘ஆளுநர் மாளிகைக்கு செல்ல பெண்கள் பயப்படுகின்றனர்’ என்றார். இதையடுத்து முதல்வர் மம்தா, 2 எம்எல்ஏக்கள் மற்றும் பிற திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்களுக்கு எதிராக ஆளுநர் தரப்பில் கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்த வழக்கு நீதிபதி கிருஷ்ணா ராவ் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆளுநர் குறித்து மேலும் கருத்து தெரிவிக்க இடைக்கால தடை விதிக்க வேண்டுமென ஆளுநர் போஸ் தரப்பில் வலியுறுத்தப்பட்டது. மம்தா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் எஸ்.என்.முகர்ஜி, ‘‘மம்தா கூறியது, பொது நலன் சார்ந்த பிரச்னைகளில் நியாயமான கருத்து. இது அவதூறு அல்ல. ராஜ்பவனில் நடப்பதாக கூறப்படும் சில சம்பவங்களால் அங்கு செல்ல பெண்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். அத்தகைய அச்சம் தெரிவித்த பெண்களின் பெயர்களை பிரமாணப் பத்திரத்தில் தெரிவிக்க தயாராக இருக்கிறோம்’’ என்றார்.

The post ராஜ்பவன் செல்ல பெண்கள் அச்சம் ஆளுநர் குறித்து மம்தா அவதூறாக பேசவில்லை: கொல்கத்தா ஐகோர்ட்டில் வாதம் appeared first on Dinakaran.

Related Stories: