ஐகோர்ட் வக்கீல் வீட்டில் 29 சவரன் நகை கொள்ளை

கூடுவாஞ்சேரி: வண்டலூரில் ஐகோர்ட் வக்கீல் வீட்டில் 29 சவரன் நகைகள் கொள்ளை போனது குறித்து சிசிடிவி பதிவுகளை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். வண்டலூர் சிங்கார தோட்டம், இரண்டாவது குறுக்கு தெருவை சேர்ந்தவர் கமலபிரியா (30). இவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். இவரது தந்தை ராமலிங்கம் (54). இவர் கூடுவாஞ்சேரியில் உள்ள தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், இருவரும் நேற்று முன்தினம் காலை வழக்கம்போல் வேலைக்கு சென்றுவிட்டனர்.

அப்போது, வீட்டில் இருந்த கமலபிரியாவின் தாய் தமிழரசி, தம்பி லோகேஷ் ஆகிய இருவரும் திண்டிவனத்தில் உள்ள முருகன் கோயிலுக்கு சென்று விட்டு மாலையில் வீடு திரும்பினர். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்டு திடுக்கிட்டனர். பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் வைத்திருந்த 29 சவரன் தங்க நகைகள் மற்றும் 2 கிலோ வெள்ளி பொருட்கள் ஆகியவை கொள்ளை போனதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து கமலபிரியா ஓட்டேரி போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை வைத்து கொள்ளையர்களை வலை வீசி தேடி வருகின்றனர்.

The post ஐகோர்ட் வக்கீல் வீட்டில் 29 சவரன் நகை கொள்ளை appeared first on Dinakaran.

Related Stories: