‘உங்களைத் தேடி, உங்கள் ஊரில்’ திட்டத்தின் கீழ் பல்லாவரம், பம்மல் குறு வட்டங்களில் இன்று முன்னோட்ட முகாம்: பொதுமக்கள் மனு அளிக்கலாம்

சென்னை: பல்லாவரம் வட்டத்தில் ‘உங்களைத் தேடி, உங்கள் ஊரில்’ திட்ட முன்னோட்ட முகாமையொட்டி பல்லாவரம், பம்மல் ஆகிய குறுவட்ட வருவாய் ஆய்வாளர் அலுவலகங்களில் இன்று பொதுமக்கள் மனு அளிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அருண்ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மக்களை நாடி, மக்கள் குறைகளை கேட்டு, உடனுக்குடன் தீர்வு காண அரசு இயந்திரம் களத்திற்கே வரும் ‘உங்களை தேடி உங்கள் ஊரில்’ என்ற புதிய திட்டம் தமிழக முதல்வரால் அறிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தினை செயலாக்கும் நோக்கில், வரும் 18ம் தேதி செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் மற்றும் அனைத்து துறை அலுவலர்களால், பல்லாவரம் வட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், நியாய விலைக்கடைகள், பள்ளிகள் மற்றும் பல்வேறு வளர்ச்சி பணிகள் ஆய்வு செய்யப்படும்.

இந்நிகழ்வின் ஒரு பகுதியாக மேற்படி நாளில் மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை பல்லாவரம் மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் பொதுமக்கள், மாவட்ட கலெக்டரை நேரில் சந்தித்து தங்களது மனுக்களை அளிக்கலாம்.
மேலும், நிகழ்ச்சியின் முன்னோட்டமாக இன்று பல்லாவரம் வட்டத்தில் உள்ள குறுவட்டங்கள் முறையே பல்லாவரம், பம்மல் ஆகிய குறுவட்ட வருவாய் ஆய்வாளர் அலுவலகங்களில், பொதுமக்கள் அனைத்து துறை சார்ந்த தங்களின் குறைதீர் மனுக்களை அளிக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post ‘உங்களைத் தேடி, உங்கள் ஊரில்’ திட்டத்தின் கீழ் பல்லாவரம், பம்மல் குறு வட்டங்களில் இன்று முன்னோட்ட முகாம்: பொதுமக்கள் மனு அளிக்கலாம் appeared first on Dinakaran.

Related Stories: