ஒவ்வொரு மாதமும் அதிகபட்சமாக மின்னணு பண பரிவர்த்தனை மூலம் பயணச் சீட்டு வழங்கும் அரசு பஸ் கண்டக்டர்களுக்கு பரிசு

சென்னை : ஒவ்வொரு மாதமும் அதிகபட்சமாக மின்னணு பண பரிவர்த்தனை மூலம் பயணச் சீட்டு வழங்கும் நடத்துநர்களுக்கு பரிசு வழங்கப்படும் என்று தமிழ்நாடு போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது. அரசு விரைவு போக்குவரத்துக் கழக பேருந்துகளில் கடந்த ஏப்ரல் 1ம் தேதி முதல் மின்னணு பயணச்சீட்டு இயந்திரம் மூலம் பயணச்சீட்டு வழங்கப்பட்டு வருகிறது. முதற்கட்டமாக குறிப்பிட்ட பேருந்துகளில் அரசு விரைவு போக்குவரத்து கழகப் பேருந்துகளில் இந்த வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கூகுள் பே, போன் பே போன்றவற்றின் மூலம் பணம் செலுத்தி பேருந்துகளில் பயணச்சீட்டு பெற்றுக்கொள்ளலாம். இந்நிலையில், பயணிகளிடம் டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் நடத்துநர்களுக்குப் பரிசு வழங்கப்படும் என அரசு விரைவு போக்குவரத்து கழக மேலாண் இயக்குநர் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளார்.

அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக நிர்வாக இயக்குநர் ஆர்.மோகன், அனைத்து கிளை மேலாளர்கள் உள்ளிட்டோருக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: அரசு விரைவுப் பேருந்துகளில் கடந்த ஏப்.1-ம் தேதி முதல் மின்னணு பயணச்சீட்டு கருவி மூலம் பயணச்சீட்டு வழங்கப்பட்டு வருகிறது. இக்கருவியில் கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு, க்யூ ஆர் குறியீடு ஆகியவற்றின் மூலம் பணம் செலுத்தி பயணச்சீட்டு பெறுவதை ஊக்குவிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.அதன்படி, ஒவ்வொரு மாதமும் இம்முறையில் அதிகபட்சமாக மின்னணு பணப்பரிவர்த்தனை மூலம் பயணச்சீட்டு வழங்கும் நடத்துநர்களுக்கு பரிசுத் தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post ஒவ்வொரு மாதமும் அதிகபட்சமாக மின்னணு பண பரிவர்த்தனை மூலம் பயணச் சீட்டு வழங்கும் அரசு பஸ் கண்டக்டர்களுக்கு பரிசு appeared first on Dinakaran.

Related Stories: