தமிழ்நாட்டில் மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்: நீர்வளத்துறை – மணிவாசன்; பொதுப்பணித்துறை – மங்கத் ராம் சர்மா; சுகாதாரத்துறை – சுப்ரியா சாகு

சென்னை: தமிழ்நாட்டில் மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் நேற்று அதிரடியாக மாற்றப்பட்டனர். நீர்வளத்துறை செயலாளராக மணிவாசன், பொதுப்பணித்துறை செயலாளராக மங்கத் ராம் சர்மா, சுகாதாரத்துறை செயலாளராக சுப்ரியா சாகு ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாடு அரசு தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா நேற்று வெளியிட்ட உத்தரவில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு அரசின் சுற்றுலா, கலாச்சாரம் மற்றும் இந்து சமய அறநிலையத் துறை செயலாளராக பணியாற்றி வந்த கே.மணிவாசன், நீர்வளத்துறையின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். பொதுப்பணித்துறை செயலாளராக பணியாற்றி வந்த பி.சந்தரமோகன், சுற்றுலா, கலாச்சாரம் மற்றும் இந்து சமய அறநிலையத் துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை செயலாளராக பணியாற்றி வந்த மங்கத் ராம் சர்மா பொதுப்பணித்துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை செயலாளராக பணியாற்றி வந்த பி.செந்தில்குமார், சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை செயலாளராக பணியாற்றி வந்த சுப்ரியா சாகு, சுகாதாரத்துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

சுகாதாரத்துறை செயலாளராக பணியாற்றி வந்த ககன்தீப் சிங்பேடி, ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை செயலாராக நியமிக்கப்பட்டுள்ளார். நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை செயலாளராக பணியாற்றி வந்த பிரதீப் யாதவ், உயர்கல்வித்துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். உயர் கல்வித்துறையின் செயலாளராக இருந்த கார்த்திக், விடுமுறையில் உள்ளார். தமிழ்நாடு சாலை பிரிவு திட்டம்-2 திட்ட இயக்குனராக இருந்த ஆர்.செல்வராஜ் நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் மேலாண்மை இயக்குநராக இருந்த அ.ஜான் லூயிஸ், சமூக பாதுகாப்பு திட்ட இயக்குநராகவும்; வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத்துறை கூடுதல் செயலாளராக இருந்த எம்.விஜயலட்சுமி, இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை இயக்குநராகவும்; நில சீர்திருத்தத்துறை ஆணையர் என்.வெங்கடாசலம் ஆவணக் காப்பகம் மற்றும் வரலாற்று ஆராய்ச்சி ஆணையராகவும்; தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்க திட்ட இயக்குனர் மற்றும் உறுப்பினர் செயலாளராக இருந்த டி.என்.ஹரிஹரன், நில சீர்திருத்த துறை ஆணையராகவும்; நகராட்சி நிர்வாகத்துறை சிறப்பு செயலராக இருந்த ஆர்.லில்லி, போக்குவரத்துத் துறை சிறப்பு செயலாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

நீர்வளத்துறை செயலாளராக பணியாற்றி வந்த சந்தீப் சக்சேனா, தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவன தலைவர் மற்றும் மேலாண் இயக்குனராகவும்; தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவன தலைவர் மற்றும் மேலாண் இயக்குனராக இருந்த சாய் குமார், தமிழக தொழில் முதலீட்டு கழகத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனராகவும்; அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் தலைவராக இருந்த சி.என்.மகேஸ்வரன், தமிழ்நாடு உப்புக்கழகம் மேலாண் இயக்குனராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். செய்தி துறை இயக்குனராக உள்ள ஆர்.வைத்திநாதன், தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் மேலாண்மை இயக்குநராகவும் கூடுதல் பொறுப்பு வகிப்பார். தமிழ்நாடு பாசன வேளாண்மை நவீனமயமாக்கல் திட்ட இயக்குனராக உள்ள டி.எஸ்.ஜவஹர், சமூக சீர்திருத்த துறை செயலாளராகவும் கூடுதல் பொறுப்பு வகிப்பார்.

The post தமிழ்நாட்டில் மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்: நீர்வளத்துறை – மணிவாசன்; பொதுப்பணித்துறை – மங்கத் ராம் சர்மா; சுகாதாரத்துறை – சுப்ரியா சாகு appeared first on Dinakaran.

Related Stories: