பாரீஸ் ஒலிம்பிக், பாரா ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் 5 வீரர், வீராங்கனைகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகை: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்

சென்னை: பாரீஸ் நகரில் நடைபெற உள்ள ஒலிம்பிக் மற்றும் பாரா ஒலிம்பிக் போட்டிகளில் கலந்துகொள்ள உள்ள தமிழ்நாட்டைச் சார்ந்த 5 வீரர், வீராங்கனைகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகையாக 35 லட்சம் ரூபாய்க்கான காசோலைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். விளையாட்டு துறையில் இந்தியாவிலேயே சிறந்த மாநிலமாக தமிழ்நாட்டை உருவாக்கிடவும், அகில இந்திய அளவிலும் பன்னாட்டு அளவிலும் நடைபெறும் பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் தமிழ்நாட்டை சேர்ந்த விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பங்குகொண்டு வெற்றி பெறும் வகையில் அவர்களுக்கு உரிய பயிற்சி அளித்தல், உயரிய ஊக்கத்தொகை வழங்குதல், விளையாட்டிற்கான உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துதல் என பல்வேறு முனைப்பான நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு எடுத்து வருகிறது.

அந்த வகையில், ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதத்தில் நடைபெற உள்ள பாரீஸ் ஒலிம்பிக் மற்றும் பாரா ஒலிம்பிக் போட்டிகளில் கலந்துகொள்ள இதுவரை தமிழ்நாட்டைச் சார்ந்த 15 வீரர்கள், வீராங்கனைகள் தேர்வாகியுள்ளனர்.
இவர்களில், பிருத்விராஜ் தொண்டைமான் (துப்பாக்கி சுடுதல்), துளசிமதி முருகேசன் (பாரா பேட்மிண்டன்), மனிஷா ராமதாஸ் (பாரா பேட்மிண்டன்), நித்யா ஸ்ரீ சுமதி சிவன் (பாரா பேட்மிண்டன்) மற்றும் சிவரஞ்சன் சோலைமலை (பாரா பேட்மிண்டன்) ஆகியோருக்கு ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொள்வதற்கான முன்னேற்பாடுகளை மேற்கொள்ள சிறப்பு ஊக்கத்தொகையாக தலா ரூ.7 லட்சம் வீதம் மொத்தம் 35 லட்சம் ரூபாய்க்கான காசோலைகளை சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வழங்கி, வாழ்த்தினார். இந்நிகழ்ச்சியில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தலைமை செயலாளர் சிவ் தாஸ் மீனா, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை செயலாளர் அதுல்ய மிஸ்ரா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் மேகநாத ரெட்டி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

The post பாரீஸ் ஒலிம்பிக், பாரா ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் 5 வீரர், வீராங்கனைகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகை: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார் appeared first on Dinakaran.

Related Stories: