ஆம்பூர் அருகே கெங்கையம்மன் சிரசு திருவிழா: ஏராளமான பக்தர்கள் தரிசனம்

ஆம்பூர்: ஆம்பூர் அருகே இன்று நடந்த கெங்கையம்மன் கோயில் திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர். திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த தேவலாபுரத்தில் பழமையான திருப்பதி கெங்கையம்மன் கோயில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் சிரசு திருவிழா நடத்தப்படுவது வழக்கம். அதன்படி 94ம் ஆண்டு சிரசு திருவிழா கடந்த 25ம் தேதி விழா துவங்கியது. தொடர்ந்து ஒவ்வொரு நாளும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்து வருகிறது. நேற்றைய தினம் கூழ்வார்த்தல் நிகழ்ச்சி நடந்தது.

தொடர்ந்து இன்று அதிகாலை அம்மன் சிரசு ஊர்வலம் தொடங்கியது. முக்கிய வீதிகள் வழியாக தாரைதப்பட்டை, பேண்டு வாத்தியம், பொய்க்கால் குதிரை, நையாண்டி மேளத்துடன் வீதியுலா நடந்தது. அப்போது பக்தர்கள் சிரசுக்கு மாலை அணிவித்தும், தீபாராதனை செய்தும் வழிபட்டனர். திருவிழாவில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபட்டனர். இதையொட்டி ஆம்பூர் டிஎஸ்பி அறிவழகன் தலைமையில் 50க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

The post ஆம்பூர் அருகே கெங்கையம்மன் சிரசு திருவிழா: ஏராளமான பக்தர்கள் தரிசனம் appeared first on Dinakaran.

Related Stories: