1,000 டாஸ்மாக் கடைகளை அரசு மூட வேண்டும்: ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் பேட்டி

நாமக்கல்: தமிழகத்தில் 1000 டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்று ஒன்றிய இணையமைச்சர் எல்.முருகன் கூறினார். நாமக்கல் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக, ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் நேற்று நாமக்கல் வந்தார். நாமக்கல் சுற்றுலா மாளிகையில், அவர் நிருபர்களிடம் கூறியதாவது: கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் குடித்து 50க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தது மிகப்பெரிய சோக சம்பவம். இந்த சம்பவத்திற்கு, மூல காரணம் யார் என்பதை தீவிர விசாரணை செய்து கண்டுபிடித்து, அனைவரையும் கைது செய்ய வேண்டும். இதற்காகத்தான் தமிழக பாஜ தலைவர் சிபிஐ விசாரணை கேட்டுள்ளார்.

தமிழகத்தில் குறைந்தது 1,000 டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும். இந்தியாவில் மோடி பிரதமராக பதவியேற்ற கடந்த 10 ஆண்டுகளில், தமிழ்நாட்டிற்கு சுமார் ரூ.11 லட்சம் கோடி நிதிஉதவி வழங்கப்பட்டு, ஏராளமான திட்டப்பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. 2வது முறையாக ஒன்றிய அமைச்சரவையில் பொறுப்பேற்றுள்ள நான், மேலும் பல திட்டங்களை தமிழகத்திற்கு கொண்டு வருவேன். பெங்களூருவில் இருந்து நாமக்கல் வழியாக செல்லும் வந்தே பாரத் ரயில், நாமக்கல் ரயில் நிலையத்தில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அமைச்சர் எல்.முருகன் தெரிவித்தார்.

The post 1,000 டாஸ்மாக் கடைகளை அரசு மூட வேண்டும்: ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: