தங்கையை காதலித்ததால் பஞ்சாயத்து பேச அழைத்து வாலிபருக்கு சரமாரி வெட்டு: அண்ணன் கைது

பெரம்பூர்: வியாசர்பாடி சர்மா நகர், 12வது தெருவில் வசித்து வருபவர் ரஞ்சித் குமார் (24). இவர் கோயம்பேட்டில் உள்ள தனியார் கார் கம்பெனியில் மெக்கானிக்காக வேலை செய்து வருகிறார். இவர், தனது எதிர் வீட்டில் வசிக்கும் பெண்ணை காதலித்து வந்துள்ளார். இதுபற்றி அறிந்த அந்த பெண்ணின் அண்ணன் ஷங்கர், நேற்று முன்தினம் ரஞ்சித் குமாருக்கு போன் செய்து, எனது தங்கை காதல் சம்பந்தமாக உன்னிடம் பேச வேண்டும் வா, என அழைத்துள்ளார்.
அதன்பேரில், ரஞ்சித் குமாரும் நேற்று முன்தினம் இரவு 8 மணிக்கு சங்கர் கூறிய எருக்கஞ்சேரி பகுதியில் உள்ள ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு சென்றுள்ளார். அங்கு, சங்கர் தனது நண்பர்களுடன் சேர்ந்து, எனது தங்கை சிறுமி. அவரை காதலிப்பதை நிறுத்தி விடு, என ரஞ்சித்குமாரிடம் கூறியுள்ளார்.

அவர் மறுத்ததால், இருவருக்கும் தகறாறு ஏற்பட்டது. அப்போது, சங்கர் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ரஞ்சித் குமாரை சரமாரியாக வெட்டினார். இதில் கை, முகம், கால் உள்ளிட்ட இடங்களில் ரஞ்சித் குமாருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சுமார் 16 தையல்கள் போடப்பட்ட நிலையில் ரஞ்சித் குமார் சிகிச்சை பெற்று வருகிறார். சம்பவம் தொடர்பாக கொடுங்கையூர் இன்ஸ்பெக்டர் சரவணன் வழக்கு பதிவு செய்து நேற்று காலை வியாசர்பாடி சர்மா நகர் 12வது தெருவை சேர்ந்த சங்கரை (19), கைது செய்து, விசாரித்து வருகிறார்.

The post தங்கையை காதலித்ததால் பஞ்சாயத்து பேச அழைத்து வாலிபருக்கு சரமாரி வெட்டு: அண்ணன் கைது appeared first on Dinakaran.

Related Stories: