போலி ஆவணம் சமர்ப்பித்து நர்சிங் கவுன்சிலில் பதிவு செய்ய முயற்சி: 2 பீகார் வாலிபர்கள் கைது

சென்னை: போலி ஆவணங்கள் மூலம் நர்சிங் கவுன்சிலிங்கில் பதிவு செய்ய முயன்ற 2 பீகார் வாலிபர்களை மயிலாப்பூர் போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள 2 பெண்களை போலீசார் தேடி வருகின்றனர். சென்னை சாந்தோம் நெடுஞ்சாலையில் தமிழ்நாடு நர்சிங் கவுன்சில் உள்ளது. இதில் ஒவ்வொரு ஆண்டும் நர்சிங் முடித்தவர்கள் பணிக்காக பதிவு செய்வது வழக்கம். அதன்படி நேற்று முன்தினம் காலை 11 மணிக்கு நர்சிங் கவுன்சிலில் பதிவு செய்ய பீகார் மாநிலத்தை சேர்ந்த சம்பு குமார் (38) மற்றும் விஜேந்திர குமார் (29) ஆகியோர் வந்தனர்.

அவர்கள் தங்களது மனைவிகள் நர்சிங் படிப்பை முடித்து விட்டதாகவும், அதை பதிவு செய்ய வந்ததாக கூறி சான்றிதழ்களை அதிகாரிகளிடம் கொடுத்தனர். அப்போது நர்சிங் சான்றிதழ் மற்றும் மதிப்பெண் சான்றிதழ் போலியானது என தெரியவந்தது. அதைதொடர்ந்து சம்பவம் குறித்து தமிழ்நாடு நர்சிங் கவுன்சில் கண்காணிப்பாளர் ஷீலா, மயிலாப்பூர் போலீசாருக்கு தகவல் அளித்தார். அதன்படி, விரைந்து வந்த போலீசார் போலி சான்றிதழை பதிவு செய்ய முயன்ற பீகார் மாநிலத்தை சேர்ந்த சம்பு குமார் மற்றும் விஜேந்திரகுமாரை பிடித்து விசாரணை நடத்தினர்.

அப்போது, தங்களது மனைவிகனான குஞ்ஜா குமாரி, குமாரி அங்கீதா ஆகியோர் நர்சிங் படித்து முடித்தது போல் போலியான நர்சிங் சான்றிதழை அகில இந்திய இட ஒதுக்கீட்டின் மூலம் தமிழ்நாட்டில் பணியாற்றும் வகையில் பதிவு செய்ய வந்தது தெரியவந்தது. அதைதொடர்ந்து போலீசார் 2 பீகார் வாலிபர்களையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து போலி சான்றிதழ்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள குஞ்ஜா குமாரி மற்றும் குமாாி அங்கீதா ஆகியோரை தேடி வருகின்றனர்.

The post போலி ஆவணம் சமர்ப்பித்து நர்சிங் கவுன்சிலில் பதிவு செய்ய முயற்சி: 2 பீகார் வாலிபர்கள் கைது appeared first on Dinakaran.

Related Stories: