பீகாரில் 100 பெண்களை அடைத்து வைத்து பாலியல் சித்ரவதை: 9 பேர் மீது வழக்குப்பதிவு

 

பீகார்: பீகாரில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி 100-க்கும் மேற்பட்ட இளம்பெண்களை அடைத்து வைத்து சித்ரவதை செய்து வந்துள்ளனர். முசாபர்பூர் அருகே பெண்களை பெல்டால் அடித்து பாலியல் பலாத்காரம் செய்த 9 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் வெளியிட்ட விடியோவால் கொடூரம் வெளிச்சத்துக்கு வந்தது.

பீகாரில் முசாபர்பூர் பகுதியில் ரூ.50,000 ஊதியத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி 100-க்கும் மேற்பட்ட இளம்பெண்களை அடைத்து வைத்து பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குற்றவாளிகளின் பிடியில் இருந்து தப்பித்த பாதிக்கப்பட்ட பெண் இந்த கொடூர சம்பம் குறித்து தகவல் தெரிவித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பெண்களுக்கான வேலை வாய்ப்புகள் குறித்து சமூக ஊடகங்களில் வெளியான தகவலின் மூலம் டி.வி.ஆர் என்ற நிறுவனத்துடன் தொடர்பு கொண்டதாக பாதிக்கப்பட்ட பெண் கூறினார். விண்ணப்பித்து தேர்வானதும், பயிற்சி என்ற பெயரில் ரூ.20 ஆயிரம் கேட்கப்பட்டதாகவும், பணத்தை டெபாசிட் செய்த பிறகு, அவர் பல சிறுமிகளுடன் அஹியாபூர் காவல் நிலையப் பகுதியில் உள்ள பக்ரிக்கு அருகிலுள்ள ஒரு வீட்டில் தங்க வைக்கப்பட்டார் எனவும் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து 3 மூன்று மாதங்களுக்கு மேல் சம்பளம் கிடைக்காதபோது, ​​​​அமைப்பின் சிஎம்டி திலக் சிங் என்பவரிடம் சம்பளம் குறித்து கேட்டுள்ளார். அப்போது மேலும் 50 பெண்களை அமைப்பில் இணைத்தால் அவரது சம்பளம் ரூ. 50,000 ஆக உயர்த்தப்படும் என கூறப்பட்டுள்ளது. மேலும் 50 பேரை தன்னால் சேர்க்க முடியவில்லை என்று பாதிக்கப்பட்ட பெண் கூறியதும், அவர் மீது அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து தனது மொபைலின் காண்டாக்ட் லிஸ்டில் உள்ளவர்களை அந்த நிறுவனத்துடன் இணைக்க ஆரம்பித்தார். அதுவரை பாத்திக்கப்பட்ட பெண்ணிற்கு இது ஒரு மோசடி அமைப்பு என தெரியவில்லை என கூறப்படுகிறது. பின்னர் அமைப்பின் சிஎம்டி திலக் சிங் தன்னுடன் உடல் உறவில் ஈடுபட வற்புறுத்தியதாக பாதிக்கப்பட்ட பெண் கூறினார். மேலும் பெல்டால் அடித்து துன்புறுத்தியதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதையடுத்து அங்கிருந்து தப்பித்து வந்ததாகவும் பாதிக்கப்பட்ட பெண் தெரிவித்துள்ளார். இந்த கொடூர சம்பவத்தை அரசு தீவிரமாக விசாரிக்க வேண்டும் எனவும் குற்றவாளிக்கு மிகக் கடுமையான தண்டனை வழங்க வேண்டும் எனவும் அப்பெண் கோரிக்கை விடுத்துள்ளார். பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து, பெல்டால் அடித்து கொடுமை செய்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்ததையடுத்து முக்கிய குற்றவாளி தலைமறைவாகியுள்ளார். மேலும் 9 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

The post பீகாரில் 100 பெண்களை அடைத்து வைத்து பாலியல் சித்ரவதை: 9 பேர் மீது வழக்குப்பதிவு appeared first on Dinakaran.

Related Stories: