மனைவியை எஸ்ஐ அபகரித்து விட்டார்: கணவர் போலீசில் புகார்

ராஜபாளையம்: தனது மனைவியை அபகரித்து வைத்து மிரட்டல் விடுப்பதாக, தனிப்பிரிவு எஸ்ஐ மீது போலீசில் தொழிலாளி புகார் அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 38 வயதான கூலித்தொழிலாளி. இவருக்கு 35 வயதில் மனைவி, 7 வயதில் மகன் உள்ளனர். 4 ஆண்டுகளுக்கு முன்பு இவர் குவைத் நாட்டிற்கு வேலைக்கு சென்றார். வீட்டில் மகனுடன் இருந்த இவரது மனைவிக்கும், எஸ்ஐ ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

வெளிநாட்டில் இருந்த வந்த கணவரை, மீண்டும் வெளிநாட்டு வேலைக்கு செல்லுமாறு மனைவி வற்புறுத்தி வந்துள்ளார். இதனால், சந்தேகப்பட்ட கணவர், வெளிநாடு செல்லாமல் திருப்பூரில் தங்கி வேலை பார்த்து வந்தார். மேலும், மனைவியின் நடத்தையில் சந்தேகமடைந்தவர், இதுகுறித்து விசாரித்தார். இதில், ராஜபாளையத்தில் பணிபுரியும் எஸ்ஐ ஒருவருடன் 3 ஆண்டுகளாக மனைவி தொடர்பில் இருப்பது தெரியவந்தது. எஸ்.ஐயுடனான தொடர்பை துண்டிக்குமாறு மனைவியிடம் கண்டித்துள்ளார். ஆனால் அவர் மறுத்துள்ளார். மேலும், தனது கணவரிடம் இருந்து விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்நிலையில், கணவரின் வீட்டிற்கு சென்ற எஸ்ஐ, ‘உன் மனைவிக்கு விவாகரத்து கொடுத்து விட்டு ஒதுங்கிக்கொள். இல்லையெனில் உன் மீது கஞ்சா வழக்குப்பதிவு செய்து உள்ளே தள்ளி விடுவேன்’ என மிரட்டல் விடுத்துள்ளதாக தெரிகிறது. இதுகுறித்து கணவர், ஆன்லைன் மூலம் ராஜபாளையம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். இதன்பேரில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். எஸ்ஐக்கு ஏற்கனவே திருமணம் முடிந்து 2 குழந்தைகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

The post மனைவியை எஸ்ஐ அபகரித்து விட்டார்: கணவர் போலீசில் புகார் appeared first on Dinakaran.

Related Stories: