பிரிந்து வாழும் நிலையில் பெண் காவலருக்கு கத்திக்குத்து: கணவருக்கு போலீசார் வலை, பட்டப்பகலில் பயங்கரம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே பட்டப்பகலில் பெண் காவலரை, சரமாரியாக கத்தியால் குத்திவிட்டு தப்பிச்சென்ற அவரது கணவரை போலீசார் தேடி வருகின்றனர். காஞ்சிபுரம் மாவட்டம், சிறுகாவேரிப்பாக்கம் பகுதியில் வசித்து வருபவர் டில்லிராணி (31). இவர் விஷ்ணுகாஞ்சி காவல் நிலையத்தில் 2ம் நிலை காவலராக பணியாற்றி வருகிறார். இவரது கணவர் மேகநாதன் கணினி உதிரிபாகங்கள் விற்பனையாளராக பணியாற்றி வருகிறார்.

இந்தநிலையில் கருத்து வேறுபாடு காரணமாக கணவன், மனைவி இருவரும் கடந்த 6 மாதங்களாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.  இதனையடுத்து நேற்று பெண் காவலர் டில்லிராணி பணி முடிந்து, காஞ்சிபுரம் சாலைத்தெரு அருகில் நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த அவரது கணவர் மேகநாதன், டில்லி ராணியை தடுத்து நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். வாக்குவாதம் முற்றியதையடுத்து ஆத்திரமடைந்த மேகநாதன், தான் வைத்திருந்த கத்தியால் டில்லிராணியை சரமாரியாக குத்திவிட்டு அங்கிருந்து தப்பியோடினார்.

இதில் பல இடங்களில் டில்லி ராணிக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அவரது அலறல் சத்தம்கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர், பலத்த காயமடைந்த டில்லிராணியை மீட்டு, காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். தகவலறிந்து அங்கு சென்ற சிவகாஞ்சி போலீசார், இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்தனர். மேலும் பெண் காவலர் டில்லிராணியை கத்தியால் குத்துவிட்டு தப்பியோடிய அவரது கணவர் மேகநாதனை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post பிரிந்து வாழும் நிலையில் பெண் காவலருக்கு கத்திக்குத்து: கணவருக்கு போலீசார் வலை, பட்டப்பகலில் பயங்கரம் appeared first on Dinakaran.

Related Stories: