ஜம்புத்தீவு பிரகடன நினைவு நாள் அனுசரிப்பு மறைக்கப்பட்ட சுதந்திர போராட்ட வரலாறை வெளிக்கொணர வேண்டும்: ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு

சென்னை: மறைக்கப்பட்ட உண்மையான சுதந்திர போராட்ட வரலாற்றை நாம் வெளிக் கொண்டு வர வேண்டும் என தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி கூறினார். சென்னை கிண்டி ஆளுநர் மாளிகையில் முதல் இந்திய சுதந்திர போர் பிரகடனம் என்று சொல்லப்படும் ஜம்புத்தீவு பிரகடன நினைவு நாள் மற்றும் அறியப்படாத தமிழக சுதந்திரப் போராட்ட வீரர்கள் பற்றிய ஆய்வுகள் நடத்தியவர்களை கவுரவிக்கும் நிகழ்வு ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமையில் பாரதியார் மண்டபத்தில் நேற்று நடந்தது.

விழாவில் சுதந்திர போராட்ட தியாகிகள் குறித்தும் அறியப்படாத தமிழக சுதந்திர போராட்ட தியாகிகள் குறித்தும் பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவர்கள் எழுதிய 89 ஆய்வு நூல்களை ஆளுநர் வெளியிட்டார். மேலும் சுதந்திரப் போராட்ட தியாகிகள் நேரில் அழைத்துவரப்பட்டு ஆளுநர் சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. அப்போது, ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியதாவது: இந்நாளில் மருது சகோதரர்கள் பற்றி நினைவுகூர்வது மிகவும் சிறப்பு வாய்ந்த தருணமாகும்.

1801ம் ஆண்டு ஜம்பு தீவு பிரகடனம் மூலம் ஐரோப்பியர்களை எப்படி விரட்ட வேண்டும் என மருது சகோதரர்கள் தெரிந்து வைத்து இருந்தனர். ஜம்பு தீவு பிரகடனம் மூலம் சாதி, மதம் கடந்து அனைத்து மக்களையும் ஒன்றிணைத்து ஐரோப்பியர்களை வெளியேற்ற மருது சகோதரர்கள் முடிவு செய்தனர். அதுதான் முதல் சுதந்திர போராட்டம். அப்படி சுதந்திர போராட்ட வீரர்கள் செய்த தியாகத்தால்தான் இன்று நாம் மகிழ்ச்சியாக உள்ளோம். பல உண்மையான சுதந்திர போராட்ட வரலாறு மறைக்கப்பட்டுள்ளது. அதை நாம் வெளிக்கொண்டு வர வேண்டும்.தற்போது சுதந்திர போராட்ட தலைவர்கள் ஜாதி தலைவர்களாக மாற்றப்பட்டுள்ளனர்.

The post ஜம்புத்தீவு பிரகடன நினைவு நாள் அனுசரிப்பு மறைக்கப்பட்ட சுதந்திர போராட்ட வரலாறை வெளிக்கொணர வேண்டும்: ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு appeared first on Dinakaran.

Related Stories: