இந்த நிலையில் உச்ச நீதிமன்றத்தில் கடந்த இரு தினங்களுக்கு முன் ஒரு பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. அதில், “நீட் தேர்வில் நடைபெற்ற முறைகேடுகளின் உண்மை நிலவரங்கள் தெளிவாக அனைவருக்கும் தெரிய வேண்டும் என்றால், இதுதொடர்பான வழக்கை சிபிஐ அமைப்புக்கு மாற்றி அமைத்து, விரிவான விசாரணை நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட வேண்டும். அப்போது தான் நீட் தேர்வின் மீது மாணவர்கள் உட்பட அனைவருக்கும் நம்பிக்கை பிறக்கும்” என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.
மேற்கண்ட மனு உச்ச நீதிமன்றத்தின் கோடைக்கால சிறப்பு அமர்வு நீதிபதிகள் விக்ரம் நாத் மற்றும் சந்தீப் மேத்தா ஆகியோர் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனு மீது ஒன்றிய அரசு மற்றும் தேசிய தேர்வுகள் முகமை ஆகியோர் பதிலளிக்க வேண்டும் என்று நீதிபதிகள் நோட்டீஸ் பிறப்பித்தனர். மேலும் இதுகுறித்த விசாரணையை ஜூலை 8ம் தேதிக்கு ஒத்திவைப்பதாகவும், அப்போது இதுகுறித்து அனைத்து தரப்பில் இருந்தும் விரிவான விசாரணை நடத்தி ஒரு உத்தரவு பிறப்பிக்கப்படும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். இதேபோன்று நீட் தேர்வு விவகாரத்தில் உயர் நீதிமன்றங்களில் இருக்கும் வழக்குகள் அனைத்தையும் உச்ச நீதிமன்றத்துக்கு மாற்றக்கோரி தேசிய தேர்வுகள் முகமை தரப்பில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், இதுதொடர்பாக எதிர் மனுதாரர்கள் பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டதோடு, நீட் தொடர்பாக நிலுவையில் இருக்கும் மனுக்களோடு, இந்த வழக்கும் இணைத்து ஜூலை 8ம் தேதி விசாரிக்கப்படும் என தெரிவித்தனர்.
The post நீட் தேர்வு முறைகேடு குறித்து சிபிஐ விசாரணை நடத்தக்கோரி வழக்கு: ஒன்றிய அரசு, தேசிய தேர்வுகள் முகமை பதிலளிக்க உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் appeared first on Dinakaran.