பக்ரீத் பண்டிகையால் களைகட்டிய திருப்புவனம் ஆட்டுச்சந்தை ஒரே நாளில் ரூ.1 கோடிக்கு ஆடுகள் விற்பனை

திருப்புவனம் : பக்ரீத் பண்டிகையையொட்டி திருப்புவனம் சந்தையில் ரூ.1 கோடிக்கு ஆடுகள் விற்பனையாகின.சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை ஆட்டுச்சந்தை நடைபெறும். இதில் ஆடு, கோழி விற்பனை தவிர, காய்கறி சந்தையும் நடக்கும். வரும் 17ம் தேதி பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி நேற்று காலை ஆட்டுச்சந்தை களைகட்டியது. மதுரை, திருச்சி, திண்டுக்கல், ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து வெள்ளாடு, செம்மறி ஆடு என 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன.

ஆடுகளை வாங்க உள்ளூர் வியாபாரிகள் மட்டுமல்லாமல், பிற மாவட்டங்களில் இருந்தும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வந்திருந்தனர். இதனால் ஆடுகளின் விலையும் அதிகரித்திருந்தது. எடைக்கு ஏற்ப ஒரு ஆடு ரூ.15 ஆயிரம் முதல் ரூ.40 ஆயிரம் வரை விற்பனையானது. இதுகுறித்து ஆட்டு வியாபாரிகள் கூறுகையில், ‘‘ஜூன் 17ம் தேதி பக்ரீத் பண்டிகை வருகிறது. இதனால், ஆடுகளுக்கு கிராக்கி ஏற்பட்டு விலை அதிகரித்தது. ஆடுகளும் அதிகளவில் விற்பனைக்கு வந்துள்ளது. சந்தையில் இன்று (நேற்று) மட்டும் விற்பனை ரூ.1 கோடியை தாண்டியது’’ என்றனர்.

The post பக்ரீத் பண்டிகையால் களைகட்டிய திருப்புவனம் ஆட்டுச்சந்தை ஒரே நாளில் ரூ.1 கோடிக்கு ஆடுகள் விற்பனை appeared first on Dinakaran.

Related Stories: