பல்வேறு கொலை வழக்கில் கைதான 2 வாலிபர்கள் குண்டர் சட்டத்தில் கைது

 

ஈரோடு, ஜூன் 12: ஈரோட்டில் கொலை வழக்கில் கைதான 2 வாலிபர்கள் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர். ஈரோடு ஈவிஎன் சாலை ஸ்டோனி பாலம் பகுதியில் கடந்த மார்ச் மாதம் 17ம் தேதி அதிகாலை நிர்வாண நிலையில் 38 வயது மதிக்கத்தக்க நபர் அடித்துக்கொலை செய்யப்பட்டு கிடந்தார். கொலையான, நபரை இது வரை அடையாளம் காண முடியவில்லை. அவரது உடல் அரசு செலவில் அடக்கம் செய்யப்பட்டது.

இந்த, கொலை வழக்கு தொடர்பாக ஈரோடு தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து ஈரோடு மணல் மேடு பகுதியை சேர்ந்த சக்திவேல் மகன் விஜய் (23), ஈரோடு பெரியார் நகர் ஓடைப்பள்ளம் பகுதியை சேர்ந்த அருணாச்சலம் (28), அதே பகுதியை சேர்ந்த ரஞ்சித், ஏழுமலை ஆகிய 4 பேரை கைது செய்து நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைத்தனர்.

இதில், விஜய், அருணாச்சலம் ஆகியோர் மீது ஏற்கனவே பல்வேறு குற்ற வழக்குகள் பதிவாகி இருந்தது. இந்நிலையில், தொடர் குற்ற செயல்களில் ஈடுபட்ட விஜய், அருணாச்சலத்தை குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க ஈரோடு தெற்கு போலீசார் எஸ்பி ஜவகர் மூலமாக கலெக்டருக்கு பரிந்துரைத்தனர்.

இந்த, பரிந்துரையை ஏற்ற கலெக்டர் ராஜகோபால் சுன்கரா இருவரையும் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதன்பேரில், கோபி மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டிருந்த விஜய் மற்றும் அருணாச்சலம் இருவரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் நேற்று முன்தினம் கைது செய்து, போலீஸ் பாதுகாப்புடன் அழைத்து செல்லப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

 

The post பல்வேறு கொலை வழக்கில் கைதான 2 வாலிபர்கள் குண்டர் சட்டத்தில் கைது appeared first on Dinakaran.

Related Stories: