வேட்பாளர்கள் எண்ணிக்கை, வாக்குப்பதிவு அதிகரித்த இடங்களில் கூடுதல் மேஜைகள் போட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் 234 வாக்கு எண்ணிக்கை அறைகளில் 3,300 மேஜைகள் போடப்பட்டுள்ளன. இதுதவிர, வாக்கு எண்ணிக்கை பணியில் 10 ஆயிரம் அலுவலர்கள், 24 ஆயிரம் உதவியாளர்கள், 4,500 நுண் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டு, அவர்களுக்கான பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளுக்கும் ஒரு தொகுதிக்கு 5 முதல் 22 பேர் வரை தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு உதவும் வகையில், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களை நியமித்து இந்திய தேர்தல் ஆணையம் நேற்று முன்தினம் உத்தரவிட்டுள்ளது. குறிப்பாக, சிறப்பு வட்டாட்சியர் அளவில் பல்வேறு துறைகளில் இருப்பவர்கள் இந்த பணியில் நியமிக்கப்பட்டுள்ளனர். அதிகபட்சமாக கன்னியாகுமரி தொகுதியில் 22 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தற்போது தமிழ்நாட்டில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் 39 தொகுதிகளுக்கான வெளிமாநில பார்வையாளர்களை இந்திய தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது. அதன்படி, 39 தொகுதிகளுக்கு வெளி மாநிலங்களில் பணியாற்றி வரும் 57 ஐஏஎஸ் அதிகாரிகள் வாக்கு எண்ணிக்கை பார்வையாளர்களாக நியமனம் செய்து தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தென்சென்னை, வடசென்னை, மத்திய சென்னை உட்பட 16 தொகுதிகளுக்கு தலா 2 பார்வையாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். கன்னியாகுமரி தொகுதிக்கு மட்டும் 3 பேர் பார்வையாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதில் தேர்தல் வாக்குப்பதிவின்போது பணியாற்றிய 39 ஐஏஎஸ் அதிகாரிகளும் அடங்குவர். அதேபோன்று, ஒரு வாக்குப்பதிவு மையத்தில் 500க்கும் மேற்பட்ட தபால் வாக்குகள் இருந்தால் கூடுதலாக ஒரு மேஜை போடவும், அங்கு கூடுதலாக ஒரு உதவி தேர்தல் நடத்தும் அலுவலகர்களை நியமிக்க தேர்தல் ஆணையம் நேற்று அனுமதி அளித்துள்ளது. அதன்படி தமிழகம் முழுவதும் 39 வாக்குப்பதிவு மையங்களில் மொத்தம் 349 உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் நியமிக்கப்பட உள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறினார்.
The post வாக்கு எண்ணிக்கை நடைபெறும் 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு 57 ஐஏஎஸ் அதிகாரிகள் பொது பார்வையாளர்களாக நியமனம்: இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு appeared first on Dinakaran.