புதிய அணை கட்ட அனுமதிக்க கோரி கடிதம் கேரள அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்

சென்னை : உச்சநீதிமன்றத் தீர்ப்பிற்கு எதிராக, முல்லைப் பெரியாறு அணையை இடித்துவிட்டு புதிய அணை கட்ட அனுமதி கோரி ஒன்றிய அரசுக்கு கடிதம் எழுதியுள்ள கேரள அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை : உச்சநீதிமன்றத் தீர்ப்பிற்கு எதிராக முல்லைப் பெரியாறு அணையை முழுமையாக இடிக்க, ஒன்றிய அரசுக்கு கேரள அரசு கடிதம் எழுதியுள்ளதற்கு, எனது கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

உச்சநீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில், பேபி அணை மற்றும் அணைப் பகுதிகளை பலப்படுத்துவதற்கு போதிய நிதி ஒதுக்கப்பட்டு ஆரம்பக்கட்டப் பணிகள் துவக்கப்பட்டன. ஆனால், கட்டுமானப் பொருட்கள் கொண்டு செல்ல கேரள அரசு அனுமதி வழங்கவில்லை. மேலும், பேபி அணையை பலப்படுத்தும் கருவிகளைப் பொருத்துவதற்கு 23 மரங்களை வெட்ட மத்திய மற்றும் கேரள வனத் துறைகளிடமிருந்து அனுமதி கோரப்பட்டது.

வனத் துறையின் அனுமதியைப் பெற கேரள அரசு தடையாக இருந்தது. இதனால் பணிகள் முழுமையாக முடிவடையவில்லை. இது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்றுவரை நிலுவையில் உள்ளது. தமிழகத்தின் உரிமையை நிலை நாட்டவும், முல்லைப் பெரியாறு அணையில், உச்சநீதிமன்ற ஆணையின்படி பேபி அணையை பலப்படுத்தி 152 அடி வரை தண்ணீரைத் தேக்கி வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

The post புதிய அணை கட்ட அனுமதிக்க கோரி கடிதம் கேரள அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம் appeared first on Dinakaran.

Related Stories: