கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து 4 மாவட்டங்களுக்கு பேரிடர் மீட்பு படை அனுப்பி வைப்பு: தமிழக அரசு தகவல்

* 2 கோடி பேருக்கு செல்போன் மூலமாக எச்சரிக்கை குறுந்தகவல், மாநில, மாவட்ட அவசரகால மையங்கள் 24 மணி நேரம் இயங்க நடவடிக்கை

சென்னை: தமிழ்நாட்டில் கன்னியாகுமரி, கோயம்புத்தூர், திருநெல்வேலி மற்றும் நீலகிரி மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதனால் இந்த 4 மாவட்டங்களுக்கு பேரிடர் மீட்பு படையை சேர்ந்த 296 பேர் பாதுகாப்புக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். முன்னதாக சுமார் 2 கோடி பேருக்கு செல்போன் மூலமாக எச்சரிக்கை குறுந்தகவல் அனுப்பப்பட்டுள்ளது. மாநில மற்றும் மாவட்ட அவசரகால செயல்பாட்டு மையங்கள் கூடுதல் அலுவலர்களுடன் 24 மணிநேரமும் செயல்படும் வகையில், நிலைமை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இந்திய வானிலை ஆய்வு மையம் வரும் 21ம் தேதி முடிய பல்வேறு மாவட்டங்களில் கன மழை அல்லது மிக கனமழை பெய்யக்கூடும் என்று தெரிவித்துள்ளது. நேற்று காலை 8.30 மணி வரை தமிழ்நாட்டில் 33 மாவட்டங்களில் பரவலான மழைப் பொழிவு இருந்து வருகிறது. சராசரியாக 0.72 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. அதிகப்படியாக திருப்பத்தூர் மாவட்டத்தில் 5.35 செ.மீ. மழைப் பதிவாகியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் இடி, மின்னல் தாக்கியதன் காரணமாக ஒரு உயிரிழப்பு பதிவாகியுள்ளது. தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 15 கால்நடை இறப்புகள் ஏற்பட்டுள்ளன. 7 குடிசைகள், வீடுகள் சேதமடைந்துள்ளன. கனமழை எச்சரிக்கை வரப்பெற்றுள்ள நிலையில், பேரிடர் சூழலை திறம்படக் கையாள்வதற்கு வழங்கப்பட்டுள்ள நிலையான வழிகாட்டு நடைமுறையைப் பின்பற்றி, தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு அந்தந்த மாவட்ட ஆட்சியர்களுக்கு கடந்த 15ம் தேதி அன்று அரசு அறிவுரை வழங்கியுள்ளது.

மேலும் குமரிக்கடல், மன்னார் வளைகுடா மற்றும் அதனை அடுத்துள்ள தென் தமிழக கடலோரப் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 55 கி.மீ. வரை பலத்தக் காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் மேற்கண்ட பகுதிகளில் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என மீன்வளத் துறை ஆணையர் மூலம் மீனவர்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. கடலோரப் பகுதிகளில் நிறுவப்பட்டுள்ள 437 முன்னெச்சரிக்கை அமைப்புகள் மூலம் மீனவர்களுக்கு பலத்தக் காற்று, கடல் அலை குறித்தும், பொதுமக்களுக்கு கடல்சீற்றம் குறித்தும் எச்சரிக்கை தகவல்கள் வழங்கப்பட்டுள்ளன.

மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் உள்ள சுற்றுலா தலங்களில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை பெய்யக்கூடும் என்பதால் பொதுமக்களும், குறிப்பாக சுற்றுலாப் பயணிகளும் பாதுகாப்பாக இருக்கும் பொருட்டு கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, திண்டுக்கல், கோயம்புத்தூர், நீலகிரி, விருதுநகர் மற்றும் தேனி மாவட்டங்களில் உள்ள சுமார் 2 கோடி செல்போன்களுக்கு பொதுவான எச்சரிக்கை நடைமுறை மூலம் நேற்று முன்தி னமும், நேற்றும் எச்சரிக்கை குறுந்தகவல்கள் அனுப்பப்பட்டுள்ளன.

கனமழை எச்சரிக்கையைத் தொடர்ந்து, தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படையைச் சார்ந்த 296 வீரர்கள் அடங்கிய 9 குழுக்கள், கன்னியாகுமரி, கோயம்புத்தூர், திருநெல்வேலி மற்றும் நீலகிரி மாவட்டங்களில் நிலைநிறுத்தப்பட்டுள்ளனர். நீலகிரி மாவட்டத்திற்கு 20ம் தேதி (இன்று) வரை கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நீலகிரிக்கு வரும் சுற்றுலா பயணிகள் போதிய பாதுகாப்புடன் வரவேண்டும். சுற்றுலா வருவதை தவிர்க்க எண்ணினால் தவிர்க்கலாம். மாநில மற்றும் மாவட்ட அவசரகால செயல்பாட்டு மையங்கள் கூடுதல் அலுவலர்களுடன் 24 மணிநேரமும் செயல்பட்டு வருவதோடு, நிலைமை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து 4 மாவட்டங்களுக்கு பேரிடர் மீட்பு படை அனுப்பி வைப்பு: தமிழக அரசு தகவல் appeared first on Dinakaran.

Related Stories: