2 மாதங்களுக்கு பிறகு பெரியாறு நீர் மின்நிலையத்தில் மின்சார உற்பத்தி தொடக்கம்

கூடலூர்: லோயர்கேம்பில் உள்ள பெரியாறு நீர் மின் உற்பத்தி நிலையத்தில், இரண்டு மாதங்களுக்குப்பின் மின் உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளது. பெரியாறு நீர் மின் உற்பத்தி திட்டம் 1959 அக்டோபர் 2ம் தேதி தொடங்கப்பட்டது. இதன்படி பெரியாறு அணையிலிருந்து தமிழகப்பகுதிக்கு திறந்து விப்படும் தண்ணீரில் 1,600 கனஅடி தண்ணீரை 4 பென்ஸ்டாக் பைப் மூலம் கொண்டு வந்து, தலா 35 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கும் 4 இயந்திரங்கள் மூலம் 140 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. இதற்காக லோயர்கேம்பில் ‘பெரியாறு நீர் மின் நிலையம்’ தொடங்கப்பட்டது. தற்போது இதிலுள்ள பழைய இயந்திரங்கள் அனைத்தும் மாற்றப்பட்டு தலா 42 மெகாவாட் என 168 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கும் படி அமைத்துள்ளனர்.

இந்த ஆண்டு பெரியாறு அணையில் நீர்மட்டம் குறைந்ததால், தமிழகப்பகுதிக்கு குடிநீருக்கு மட்டுமே தண்ணீர் இரைச்சல்பாலம் வழியாக திறக்கப்பட்டது. அதனால் கடந்த ஏப்ரல் முதல் பெரியாறு நீர் மின் உற்பத்தி நிலையத்தில் மின் உற்பத்தி நிறுத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று முன்தினம் முதல் தமிழகப்பகுதிக்கு முதல்போக விவசாயத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டது. தமிழகப்பகுதிக்கு திறக்கப்பட்ட தண்ணீரின் அளவும் வினாடிக்கு 100 கனஅடியிலிருந்து 300 கனஅடியாக அதிகரித்துள்ளது. இந்த 300 கனஅடி தண்ணீரும் பென்ஸ்டாக் பைப் மூலம் கொண்டு வரப்பட்டு, நேற்று முதல் பெரியாறு நீர் மின் உற்பத்தி நிலையத்தில் உள்ள முதல் ஜெனரேட்டர் முலம், 30 மெகாவாட் மின் உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளது.

 

The post 2 மாதங்களுக்கு பிறகு பெரியாறு நீர் மின்நிலையத்தில் மின்சார உற்பத்தி தொடக்கம் appeared first on Dinakaran.

Related Stories: