கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த பாஜ நிர்வாகி குண்டர் சட்டத்தில் கைது

பண்ருட்டி, மே 17: பண்ருட்டி அருகே கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த பாஜ நிர்வாகி, குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார். கடலூர் மாவட்டம் பண்ருட்டியை அடுத்த மணப்பாக்கம், சேலம் மெயின் ரோட்டில் பெட்டிக்கடை வைத்திருப்பவர் ராஜேந்திரன் (62). இவர் சம்பவத்தன்று கடையில் இருந்து போது அங்கு வந்த பண்ருட்டி ஒன்றிய பாஜ செயலாளரும், கட்டியாம்பாளையம் பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்த ஆட்டோ டிரைவருமான கமல்ராஜ் என்பவர் ராஜேந்திரனிடம் மாமூல் கேட்டு கத்தியை காட்டி மிரட்டியுள்ளார். ராஜேந்திரன் தர மறுத்ததால் அவரது கழுத்தில் கத்தியை வைத்து சட்டை பையில் இருந்த ரூ.2 ஆயிரம் பணத்தை எடுத்துக் கொண்டார்.

அப்போது அங்கிருந்தவர்களிடம் கத்தியை காட்டி யாராவது அருகே வந்தால் குத்தி கொலை செய்துவிடுவேன் என மிரட்டல் விட்டுள்ளார். இதனால் அருகில் இருந்தவர்கள் பதறி ஓடியுள்ளனர். இதுகுறித்து புதுப்பேட்டை போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன், சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து கமல்ராஜை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் இவரது குற்ற செயலை தடுத்திடும் வகையில் கமல்ராஜை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க எஸ்பி ராஜாராம், கலெக்டர் அருண் தம்புராஜ்க்கு பரிந்துரைத்தார். கலெக்டர் உத்தரவிட்டதை தொடர்ந்து, கடலூர் மத்திய சிறையில் உள்ள கமல்ராஜை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைப்பதற்கான உத்தரவை இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் நேற்று வழங்கினார்.

The post கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த பாஜ நிர்வாகி குண்டர் சட்டத்தில் கைது appeared first on Dinakaran.

Related Stories: