புதர்மண்டிய தொள்ளாழி பள்ளி கூடம், ஜன்னல் வழியாக வகுப்பறைக்குள் ஊடுருவும் விஷப்பூச்சிகள்


வாலாஜாபாத்: வாலாஜாபாத் ஒன்றியம், தொள்ளாழி ஊராட்சியில் உள்ள ஆரம்பப்பள்ளி கூடம் முழுவதும் புதர்மண்டி காணப்படுவதால், விஷப்பூச்சிகள் ஜன்னல் வழியாக வகுப்பறைக்குள் ஊடுருவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் ஒன்றியத்திற்கு உட்பட்ட தொள்ளாழி ஊராட்சியில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த, ஊராட்சியில் ஒன்றிய ஆரம்பப்பள்ளி, அங்கன்வாடி மையம், நியாய விலைக்கடை, கிராம நிர்வாக அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலகங்கள் செயல்படுகின்றன. மேலும், இந்த தொள்ளாழி ஊராட்சியின் மையப் பகுதியில் அமைந்துள்ள ஆரம்பப்பள்ளியில் 50க்கும் மேற்பட்ட மாணவ – மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.

இப்பள்ளியின் புதிய கட்டிடத்தின் ஜன்னல்கள் உள்ள பின்பகுதியில் புதர்கள் மண்டி காணப்படுவதால், இப்புதர்களின் வழியாக நச்சுத்தன்மை வாய்ந்த விஷ பூச்சிகளும், பாம்புகள் நடமாட்டங்களும் நாளுக்குநாள் அதிகரித்து வருவதாக பெற்றோரும், சமூக ஆர்வலர்களும் குற்றம் சாட்டுகின்றனர். இதுகுறித்து, அப்பகுதி மக்கள் கூறியதாவது: வாலாஜாபாத் ஒன்றியம் தொள்ளாழி ஊராட்சியில் ஆரம்பபள்ளி செயல்படுகின்றன. இந்த பள்ளியில் புதிய கட்டிடங்களும், பள்ளி முழுவதும் சுற்றுச்சுவர் அமைத்து பாதுகாப்பான முறையில் மாணவர்களுக்கு கல்வி கற்று தருகின்றனர். இதுபோன்ற நிலையில் இந்த புதிய கட்டிடத்தின் பின்பகுதியில் புதர்கள் மண்டி கட்டிடம் முழுவதும் செடி, கொடிகள் முளைத்து காணப்படுவதால், இந்த செடி, கொடிகளின் வழியாக நச்சுத்தன்மை வாய்ந்த பூச்சிகள், பாம்புகள் ஜன்னல்களின் வழியாக வகுப்பறைக்குள் ஊடுருகின்றன.

இதுகுறித்து, பலமுறை ஊராட்சி மன்ற நிர்வாகத்திடம் தெரிவித்தும், இதுவரை எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. தற்போது, கோடை விடுமுறை காலம் என்பதால் பள்ளிக்கு மாணவ – மாணவிகள் செல்லாத நிலையில் இந்த பள்ளி வளாகத்தை தூய்மைப்படுத்தவும், பள்ளியின் பின்புறம் உள்ள புதர்களை அகற்றி மாணவ – மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

The post புதர்மண்டிய தொள்ளாழி பள்ளி கூடம், ஜன்னல் வழியாக வகுப்பறைக்குள் ஊடுருவும் விஷப்பூச்சிகள் appeared first on Dinakaran.

Related Stories: