இன்று தொடங்குவதாக இருந்த நாகை-இலங்கை கப்பல் சேவை 17ம் தேதிக்கு தள்ளிவைப்பு: சட்டரீதியான அனுமதி தாமதம் என நிர்வாகம் அறிவிப்பு

நாகப்பட்டினம்: நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன் துறை வரையிலான பயணிகள் கப்பல் சேவை இன்று தொடங்குவதாக இருந்தது திடீரென 17ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன் துறைக்கு கடந்த ஆண்டு அக்டோபர் 14ம் தேதி பயணிகள் கப்பல் சேவை தொடங்கப்பட்டது. இந்த சேவை 20ம் தேதி நிறுத்தப்பட்டது. இதன்பின்னர் மீண்டும் கப்பல் சேவையை தொடங்க வலியுறுத்தப்பட்டது.

இதனால் சிவகங்கை என்ற பெயர் கொண்ட கப்பல் அந்தமானில் இருந்து வரவழைக்கப்பட்டு நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன் துறைக்கு இன்று (13ம் தேதி) இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இந்த கப்பலில் பயணம் செய்ய விரும்புவோர் ஆன்லைன் வாயிலாக முன்பதிவு செய்ய அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டது. இதனால் பயணிகள் ஆர்வமுடன் இலங்கை செல்ல முன்பதிவு செய்திருந்தனர்.

இந்நிலையில் திடீரென கப்பல் சேவை வரும் 17ம் தேதி மாற்றப்பட்டது. இதனால் முன்பதிவு செய்திருந்த பயணிகள் கவலை அடைந்துள்ளனர். நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன் துறைக்கு கப்பல் இயக்குவதற்கான அனுமதி பெறுவதில் காலதாமதம் காரணமாகவே திட்டமிட்ட தேதியில் கப்பலை இயக்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இது குறித்து கப்பல் நிர்வாகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில், ‘தவிர்க்க முடியாத சில சட்டரீதியான அனுமதிகள் காரணமாகவும், தாமதமான கப்பலின் வருகையாலும் திட்டமிட்டபடி நாகப்பட்டினம் காங்கேசன் பயணிகள் கப்பலை 13ம் தேதி முதல் 16ம் தேதி வரை இயக்க முடியவில்லை. கப்பல் சேவை வரும் 17ம் தேதி முதல் இயக்குவதற்கு முழு ஒத்துழைப்பு வழங்குவதாக அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர். எனவே 13ம் தேதி முதல் 16ம் தேதி வரை பதிவு செய்த பயணிகளை வரும் 17ம் தேதி சேவைக்கு மாற்றியுள்ளோம்.

பதிவு செய்த பயணிகள் 17ம் தேதி அல்லது அதற்கு பின்னர் அவர்கள் விரும்பிய தேதிகளில் பயணிக்கலாம். அல்லது செலுத்திய கட்டணத்தை முழுமையாக திரும்ப பெற்றுக்கொள்ளலாம். விரும்பியவர்கள் customer.car@sailindsri.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளலாம்’ என தெரிவித்துள்ளனர்.

The post இன்று தொடங்குவதாக இருந்த நாகை-இலங்கை கப்பல் சேவை 17ம் தேதிக்கு தள்ளிவைப்பு: சட்டரீதியான அனுமதி தாமதம் என நிர்வாகம் அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: