அருமனை அருகே பட்டுப்போன தென்னை மரத்தில் ஒன்றரை கிலோ எடையில் ராட்சத காளான்

*இடி- மின்னலால் முளைத்த சுவாரசியம்

அருமனை : அருமனை அருகே 2 நாள் பெய்த மழைக்கு பிரமாண்ட காளான்கள் வரிசைகட்டி முளைத்துள்ளன. பத்துகாணி வயலின் கரை பகுதியில் சமீபத்தில் இடி மின்னலுடன் மழை பெய்தது. அதற்கு அடுத்த நாள் இடி விழுந்து பட்டுபோன தென்னை மரத்தில் திடீரென 3 காளான்கள் துளிர்விட்டன.ஆனால் அவை சிறியதாக அல்லாமல் ராட்சத காளானாக வளர்ந்துள்ளன. இதனை அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட பள்ளியின் எதிர்புறத்தில் வசிக்கும் பிரேமா (45) என்பவர் கண்டு ஆச்சரியமடைந்தார்.

உடனே அவற்றை ஆர்வத்துடன் பறித்து வந்தார். இந்த காளான் அரியவகை இடி- மின்னல் காளான் ஆகும். இவை ஒவ்வொன்றும் சுமார் ஒன்றரை கிலோ எடை உள்ளது. சுமார் 35 முதல் 40 டிகிரி சென்டி மீட்டர் நீளம் கொண்டுள்ளது.இவ்வகை காளான்கள் இடி விழுந்த தென்னை மரம் அல்லது பனை மரத்தில் இடியுடன் கூடிய மழை பெய்த அடுத்த நாள் முளைப்பதாக கூறுகிறார்கள். அதாவது இடி- மின்னல் வரும்போது தான் நைட்ரஜன், எலக்ட்ரிக் அதிர்வு கிடைக்கும் என்பதால் இவ்வகை காளானின் கனி உறுப்பு மேலே வரும் என்கிறார்கள் அறிவியலாளர்கள்.

இதனால்தான் இந்த காளானுக்கு இடி-மின்னல் காளான் என பெயர் வந்ததாம். இவ்வகை பெரிய குடை வெள்ளை காளான் அடர் வெள்ளை நிறத்தில் காணப்படும். அதோடு சமைத்து சாப்பிட்டால் மிகவும் சுவையாகவும் இருக்கும்.

The post அருமனை அருகே பட்டுப்போன தென்னை மரத்தில் ஒன்றரை கிலோ எடையில் ராட்சத காளான் appeared first on Dinakaran.

Related Stories: