விருப்பத்தின் அடிப்படையில் இல்லாமல் லட்சியத்தின் அடிப்படையில் கல்லூரி பாடங்களை தேர்வு செய்ய வேண்டும்: பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு கலெக்டர் அறிவுரை

விருதுநகர், மே 9: பாடப்பிரிவுகளை விருப்பத்தின் அடிப்படையில் தேர்வு செய்யாமல் லட்சியத்தின் அடிப்படையில் தேர்வு செய்ய வேண்டும் என மாணவர்களுக்கு கலெக்டர் அறிவுரை வழங்கினார். விருதுநகர் மாவட்டத்தில் பிளஸ் 2 பொது தேர்வில் அதிக மதிப்பெண்கள் எடுத்த அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு உயர்கல்வி சேர்க்கை, துறைகளை தேர்ந்தெடுப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நேற்று 71வது முறையாக காபி வித் கலெக்டர் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், மாணவ, மாணவிகளுடன் கலந்துரையாடிய கலெக்டர் ஜெயசீலன் அவர்களுடைய லட்சியம், அவர்களுக்கு எந்த துறையில் ஆர்வம், அவர்கள் உயர்கல்வி பயில விரும்பும் கல்லூரி மற்றும் இடம் உள்ளிட்டவை குறித்து கேட்டறிந்தார்.

பின்னர் கலெக்டர் கூறுகையில், ‘‘பள்ளி கல்லூரி படிப்பு என்பது ஒருவரின் வாழ்க்கையில் ஒருமுறை மட்டுமே கிடைக்கும். எனவே பள்ளி மற்றும் கல்லூரி படிப்பின் மூலம் வாழ்க்கைக்கான பல அனுபவங்களை கற்றுக் கொள்ளலாம். அனுபவங்களில் இருந்து கிடைக்கும் கல்விதான் சிறந்த கல்வியாகும். மருத்துவம், பொறியியல் படிப்புகளுக்கு அனைத்து நுழைவு தேர்வுகளை பற்றி தெரிந்துகொள்ள வேண்டும். எந்த கல்லூரியில் எந்த படிப்பு சேர வேண்டும் என்பதை முடிவு செய்ய வேண்டும். மருத்துவ படிப்பு சேர விரும்பும் மாணவர்கள் நுழைவு தேர்வை மனதில் வைத்து செயல்பட வேண்டும். கல்லூரி படிப்பில் சேருவதற்காக அனைத்து கல்லூரிகளிலும் தவறாமல் விண்ணப்பம் செய்ய வேண்டும். கடந்தாண்டு எந்த கல்லூரியில் எவ்வளவு கட் ஆப் மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெற்றது போன்ற தகவல்களை தெரிந்துகொள்ள வேண்டும்.

ஒவ்வொருவரும் தங்களது தனித் திறமைகளை வளர்த்துக்கொள்ள வேண்டும். 12ம் வகுப்பில் எடுக்கப்பட்டுள்ள மதிப்பெண்களை பயன்படுத்தி நமக்கான நல்ல வாயப்புகளை உருவாக்கி கொள்ள வேண்டும். தொடர்ந்து ஆர்வத்துடன், கவனசிதறல் இல்லாமல், விடா முயற்சியுடனும், கடினமாக உழைத்தால் எளிதாக வெற்றி பெறலாம். கல்லூரி படிப்பில் சேர்வதற்கு விருப்பத்தின் அடிப்படையில் மட்டும் முடிவு எடுத்தல் கூடாது. அனைவருக்கும் லட்சியம் உண்டு. லட்சியத்தை அடைவதற்கு தொடர்ந்து விடா முயற்சி செய்ய வேண்டும். நிலையான தொடர்ச்சியான சிறிய முயற்சிகள் பெரிய மாற்றங்களை ஏற்படுத்துகிறது. மேலும், ஒவ்வொருவருக்கும் என்று தனித்திறமைகள் உள்ளன. அத்திறமைகளை அனைவரும் வளர்த்து கொண்டு வாழ்வில் முன்னேற வேண்டும்’’ என்றார்.

The post விருப்பத்தின் அடிப்படையில் இல்லாமல் லட்சியத்தின் அடிப்படையில் கல்லூரி பாடங்களை தேர்வு செய்ய வேண்டும்: பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு கலெக்டர் அறிவுரை appeared first on Dinakaran.

Related Stories: