பக்கத்து வீட்டுக்காரரின் நாய் மகளை கடித்ததால் அரிவாளுடன் கொலை மிரட்டல் விடுத்த துணை வட்டாட்சியர்: வீடியோ வைரல்

கள்ளக்குறிச்சி: மகளை நாய் கடித்ததால் அரிவாளுடன் சென்று பக்கத்து வீட்டுக்காரருக்கு கொலை மிரட்டல் விடுத்த துணை வட்டாட்சியர் தொடர்பாக வீடியோ வைரலாகி வருகிறது. கள்ளக்குறிச்சி புற்றுமாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சிலம்பரசன்(36). இவர் கள்ளக்குறிச்சி வட்டாட்சியர் அலுவலகத்தில் மண்டல துணை வட்டாட்சியராக பணியாற்றி வருகிறார். இவரது பக்கத்து வீட்டில் வசித்து வரும் கொளஞ்சியப்பன்(60) என்பவர் இரண்டு நாய்களை வளர்த்து வருகிறார். கடந்தாண்டு டிசம்பர் 24ம் தேதி துணை வட்டாட்சியர் சிலம்பரசனை, கொளஞ்சியப்பன் வளர்த்துவரும் நாய் துரத்தி கடித்ததாக கூறப்படுகிறது. இதற்கு சிலம்பரசன் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளார்.

இதுகுறித்து சிலம்பரசன் கொளஞ்சியப்பனிடம் அப்போதே தகவல் தெரிவித்து நாய்களை கட்டிவைக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார். பின்னர் ஜனவரி மாதம் சிலம்பரசனின் மகள்களான கனிஷ்கா(7), லக்‌ஷணா(5) ஆகிய இருவரும் தெருவில் நின்றிருந்தபோது நாய் கடிக்க துரத்தியதாக கூறப்படுகிறது. பின்னர் கடந்த ஏப்ரல் மாதம் 22ம் தேதி சிலம்பரசனின் மூத்த மகளான கனிஷ்காவை, கொளஞ்சியப்பனின் வளர்ப்பு நாய் துரத்தி கடித்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த துணை வட்டாட்சியர் சிலம்பரசன் கடந்த ஏப்ரல் 29ம்தேதி காலை தனது வீட்டில் இருந்து கொடுவாளை எடுத்துக்கொண்டு கொளஞ்சியப்பன் வீட்டிற்கு சென்று கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இந்த வீடியோவானது தற்போது சமூக வலைதளத்தில் பரவி வைரலாகி வருகிறது. இந்நிலையில் கொளஞ்சியப்பன் மற்றும் துணை வட்டாட்சியர் சிலம்பசரன் ஆகியோர் தனித்தனியாக கள்ளக்குறிச்சி போலீசில் புகார் மனு கொடுத்துள்ளனர். இதுகுறித்து போலீசார் இருவரையும் அழைத்து விசாரணை செய்தபோது இருவரும் சமாதானமாகி புகார் மனு மீது மேல் நடவடிக்கை எடுக்க வேண்டாம் என போலீசாரிடம் கடிதம் எழுதி கொடுத்துள்ளனர்.

The post பக்கத்து வீட்டுக்காரரின் நாய் மகளை கடித்ததால் அரிவாளுடன் கொலை மிரட்டல் விடுத்த துணை வட்டாட்சியர்: வீடியோ வைரல் appeared first on Dinakaran.

Related Stories: