மழையால் சேறும் சகதியுமாக மாறிய தாவரவியல் பூங்கா புல் மைதானம்

*சுற்றுலா பயணிகள் அவதி

ஊட்டி : தொடர் மழையால் சேறும் சகதியுமாக தாவரவியல் பூங்கா புல் மைதானங்கள் மாறியதால் சுற்றுலா பயணிகள் அவதிக்குள்ளாகினர். நீலகிரி மாவட்டத்தில் ஆண்டு தோறும் ஜூன் மாதம் துவங்கி இரு மாதங்கள் தென்மேற்கு பருவமழை பெய்யும்.

அதனை தொடர்ந்து அக்டோபர் மாதம் துவங்கி இரு மாதங்கள் வடகிழக்கு பருவமழை பெய்யும். அதன் பின் 6 மாதங்களுக்கு மழை பெய்யாது. குறிப்பாக, மார்ச் மாதம் முதல் மே மாதம் வரை மழை பெய்யாது. இச்சமயங்களில் சமவெளி பகுதிகள் போன்று இங்கும் வெயலின் தாக்கம் சற்று அதிகமாக காணப்படும்.

மேலும், ஏப்ரல் மாதம் கோடை மழை பெய்யும். ஆனால், கடந்த மாதம் மழை பெய்யவில்லை. இதனால் சமவெளி பகுதிகளை போன்று இங்கும் வெயில் வாட்டி எடுத்தது. ஆனால், யாரும் எதிர்பார்க்காத நிலையில், கடந்த நான்கு நாட்களுக்கு மேலாக ஊட்டியில் நாள் தோறும் மழை பெய்து வருகிறது.

இந்நிலையில், கடந்த 10ம் தேதி ஊட்டி தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சி துவங்கியது. மலர் கண்காட்சி துவங்கிய நாள் முதலே ஊட்டியில் நாள் தோறும் மழை பெய்து வருகிறது.
இதனால், தாவரவியல் பூங்காவில் உள்ள புல் மைதானங்கள் அனைத்தும் சேறும் சகதியுமாக மாறின. இதனால், மலர் அலங்காரங்களையும், பூங்காவையும் சுற்றி பார்க்க வந்த சுற்றுலா பயணிகள் கடும் அவதிக்கு உள்ளாகினர்.

The post மழையால் சேறும் சகதியுமாக மாறிய தாவரவியல் பூங்கா புல் மைதானம் appeared first on Dinakaran.

Related Stories: