உல்லாசத்திற்கு இடையூறாக இருந்ததால் 6 வயது சிறுமி அடித்துக்கொலை..? தாய், கள்ளக்காதலனிடம் விசாரணை

சென்னை: வியாசர்பாடி பி.வி காலனியை சேர்ந்தவர் திவ்யா (31) இவரது முதல் கணவர் விஜயகாந்த். இவர்களுக்கு 9 வயதில் மகனும், 6 வயதில் தேஜஸ்வி என்ற மகளும் உள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக 3 ஆண்டுக்கு முன், கணவரை பிரிந்த திவ்யா, புழல் காந்தி 2வது தெருவில் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த திவ்யாவுக்கு, உடன் வேலை செய்த குரோம்பேட்டையை சேர்ந்த சீனிவாசன் (31) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு, கள்ளக்காதலாக மாறியது. இவர்கள் உல்லாசமாக இருப்பதற்கு சிறுமி தொந்தரவாக இருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், சிறுமி தேஜஸ்வியை குளிக்க வைப்பதற்காக சீனிவாசன் நேற்று குளியல் அறைக்கு அழைத்து சென்றுள்ளார். சிறிது நேரத்தில், சிறுமி மயங்கி விட்டதாக கூறிய சீனிவாசன், தனது தோளில் சிறுமியை போட்டுக் கொண்டு மருத்துவமனைக்கு ஓடியுள்ளார். அப்போது, சிறுமியின் தலை தொங்கியபடி இருந்துள்ளது. இதுபற்றி அப்பகுதி மக்கள் கேட்டபோது, பதில் ஏதும் சொல்லாமல் ஓடியதாக கூறப்படுகிறது.

அருகில் உள்ள மாநகராட்சி நகர்ப்புற சுகாதார மையத்திற்கு சென்று பரிசோதித்தபோது, சிறுமி ஏற்கனவே இறந்தது தெரிந்தது. மருத்துவமனை நிர்வாகம் சார்பில், இதுபற்றி புழல் போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில், அங்கு வந்த போலீசார், சிறுமியின் சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக, ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர், சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்து சீனிவாசன் மற்றும் திவ்யாவிடம் விசாரித்து வருகின்றனர். பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகே, உண்மை நிலை தெரிய வரும் என போலீசார் தரப்பில் தெரிவித்துள்ளனர். மேலும் சிறுமி வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டாரா அல்லது தண்ணீர் தொட்டில் முழுகி கொலை செய்யப்பட்டாரா என பல்வேறு கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

The post உல்லாசத்திற்கு இடையூறாக இருந்ததால் 6 வயது சிறுமி அடித்துக்கொலை..? தாய், கள்ளக்காதலனிடம் விசாரணை appeared first on Dinakaran.

Related Stories: