இன்சுலின் வழங்க கோரிய மனு தள்ளுபடி கெஜ்ரிவாலைப் பரிசோதிக்க எய்ம்ஸ் மருத்துவக் குழு: சிறப்பு நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: டெல்லி புதிய மதுபானக் கொள்கை விவகாரத்தில் கடந்த மாதம் 21ம் தேதி கைது செய்யப்பட்ட டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தற்போது நீதிமன்ற காவலின் அடிப்படையில் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் அரவிந்த் கெஜ்ரிவால் தரப்பில் டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் ஒரு புதிய மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், தனக்கு சக்கரையின் அளவு அதிகமாக இருப்பதால் தினமும் 15 நிமிடங்களுக்கு மருத்துவரை அணுக அனுமதிக்க வேண்டும். இன்சுலின் ஊசியும் பயன்படுத்தவும் அனுமதிக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார். இதையடுத்து, சிறையில் கெஜ்ரிவாலுக்கு அளிக்கப்படும் உணவு அட்டவணை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில் இந்த வழக்கு நேற்று மீண்டும் டெல்லி சிறப்பு நீதிமன்ற நீதிபதி காவேரி பவேஜா முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி பிறப்பித்த உத்தரவில், கெஜ்ரிவாலுக்கு கெஜ்ரிவாலுக்கு தேவையான அனைத்து மருத்துவ சிகிச்சைகளையும் வழங்க நீதிமன்றம் உத்தரவிடுகிறது. அதேசமயத்தில், கெஜ்ரிவாலை பரிசோதிக்க நீரிழிவு நிபுணர் அடங்கிய மருத்துவக் குழுவை அமைக்குமாறு எய்ம்ஸ் இயக்குநருக்கு உத்தரவிடப்படுகிறது. இந்தக்குழு அவருக்கு இன்சுலின் வழங்கப்பட வேண்டுமா என்பதை முடிவு செய்யும். மேலும் அவர் பின்பற்ற வேண்டிய உணவு மற்றும் உடற்பயிற்சி முறைகளையும் தெரிவிக்கும். மருத்துவக் குழுவால் பரிந்துரைக்கப்பட்ட உணவுத் திட்டத்தில் எந்த விலகலும் இருக்கக்கூடாது. எனவே, இன்சுலின் வழங்கக்கோரிய மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. இவ்வாறு உத்தரவிட்டார்.

The post இன்சுலின் வழங்க கோரிய மனு தள்ளுபடி கெஜ்ரிவாலைப் பரிசோதிக்க எய்ம்ஸ் மருத்துவக் குழு: சிறப்பு நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: