ராமர் கோயிலால் பாஜவுக்கு ஆதாயம் கிடைக்காது: சரத் பவார் பேட்டி

புனே: ராமர் கோயிலால் பாஜவுக்கு அரசியல் ஆதாயம் கிடைக்காது என்று சரத்பவார் தெரிவித்தார். தேசியவாத காங்கிரஸ் (சரத்சந்திர பவார்) கட்சி தலைவர் சரத்பவார் நேற்று முன்தினம் பேட்டியளித்தார். அப்போது, அயோத்தி கோயில் விவகாரம் மக்களவை தேர்தலில் முக்கிய பங்கு வகிக்குமா என கேள்வி கேட்டனர். அதற்கு பதிலளித்த சரத்பவார், ‘‘அயோத்தி ராமர் கோயில் விவகாரம் முடிந்துவிட்டது. இப்போது அதைப் பற்றி யாரும் பேசுவதில்லை.

இது தேர்தலில் பாஜவுக்கு எந்த ஆதாயத்தையும் தரப்போவதும் இல்லை. எனினும், அயோத்தியில் ராமர் சிலை நிறுவப்பட்டிருந்தாலும், சீதா தேவியின் சிலை இல்லை என்று பெண்கள் சிலர் கேள்வி எழுப்புகின்றனர்’’ என்றார். சரத்பவாரின் கருத்தை விமர்சித்த பாஜ மாநிலத் தலைவர் சந்திரசேகர் பவன்குலே, ‘‘கருத்து தெரிவிப்பதற்கு முன் அயோத்தி கோயில் பற்றிய தகவல்களை சரத்பவார் சேகரித்திருக்க வேண்டும்.

அயோத்தியில் ராமர் குழந்தை வடிவில் இருக்கிறார். அங்கு எப்படி சீதா தேவி சிலை வைக்க முடியும். சரத்பவார் இதனை அரசியலாக்க நினைக்கிறார். தனது சொந்த மருமகளையே வெளியாள் என்று கூறிய சரத்பவார் இப்போது சீதா தேவி மீது அக்கறை காட்டுவது போல பாசாங்கு காட்டுகிறார்’ என்றார்.

The post ராமர் கோயிலால் பாஜவுக்கு ஆதாயம் கிடைக்காது: சரத் பவார் பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: