டெல்லி வக்பு வாரிய பணி நியமன முறைகேடு விவகாரம் ஆம் ஆத்மி எம்எல்ஏ அமலாக்கத்துறையில் ஆஜர்

புதுடெல்லி: டெல்லி வக்பு வாரிய பணி நியமனத்துடன் தொடர்புடைய பணமோசடி வழக்கில் ஆம் ஆத்மி பேரவை உறுப்பினர் அமானுதுல்லா கான் அமலாக்கத்துறை முன் ஆஜரானார். ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த அமானுதுல்லா கான்(50) தற்போது டெல்லி ஓக்லா தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக உள்ளார். இவர் கடந்த 2016ம் ஆண்டு டெல்லி வக்பு வாரியத்தின் தலைவராக பொறுப்பு வகித்தார்.

அப்போது அனைத்து விதிகளையும், அரசு வழிகாட்டுதல்களையும் மீறி வக்பு வாரியத்தில் 32 பேரை பணி அமர்த்தியதாக புகார் எழுந்தது. அதன் அடிப்படையில் அமானுதுல்லா கான் மீது ஊழல் தடுப்பு பிரிவினர் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் 6 முறை சம்மன் அனுப்பியும் அமலாக்கத்துறை விசாரணைக்கு அமானுதுல்லா கான் ஆஜராகவில்லை.

இதுதொடர்பான வழக்கு கடந்த 15ம் தேதி விசாரணைக்கு வந்தபோது, கானின் முன் ஜாமீன் மனுவை விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்து விட்டது. மேலும் ஏப்ரல் 18ம் தேதி(நேற்று) விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டது. இதையடுத்து அமானுதுல்லா கான் நேற்று அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜரானார். அவரிடம் அதிகாரிகள் நீண்ட நேரம் விசாரணை நடத்தினர்.

The post டெல்லி வக்பு வாரிய பணி நியமன முறைகேடு விவகாரம் ஆம் ஆத்மி எம்எல்ஏ அமலாக்கத்துறையில் ஆஜர் appeared first on Dinakaran.

Related Stories: