ஒரு விரல் புரட்சியே… மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடர்பான பல்வேறு சந்தேகங்களும் விடைகளும்!!

டெல்லி : தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் நாளை மக்களவைத் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த நிலையில் வாக்குப்பதிவு தொடர்பான பல்வேறு சந்தேகங்களுக்கான விடைகளை இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.

வாக்குச்சாவடி எங்குள்ளது? வாக்குச்சாவடி எண் என்ன? என்பதை எவ்வாறு அறிவது?

*electoralsearch.eci.gov.in வாக்காளர் அடையாள அட்டை எண்ணை பயன்படுத்தி பெயர், வரிசை எண், வாக்குச்சாவடி குறித்த தகவல்களை அறியலாம்.

நான் முதன்முறை வாக்காளன். வாக்குச்சாவடிக்குள் என்னென்ன நடைமுறைகள் இருக்கும்?

*வாக்குச்சாவடிக்குள் நுழைந்தவுடன் முதல் நிலை வாக்குச்சாவடி அலுவலர் பெயர் மற்றும் அடையாள ஆவணத்தை சரிபார்ப்பார்

*2-வது அலுவலர் வாக்காளரின் கையொப்பம் பெற்று, விரலில் மை வைத்து வாக்களிப்பதற்கான சீட்டை வழங்குவார்.

*மூன்றாவது அலுவலரிடம் அந்த சீட்டை வழங்கிய பின் வாக்கை பதிவு செய்யலாம்.

எனது வாக்கை வேறு ஒருவர் பதிவு செய்திருந்தால் என்னால் மீண்டும் வாக்களிக்க முடியுமா?

*தேர்தல் அதிகாரியிடம் தெரியப்படுத்தி வாக்குச்சீட்டு மூலம் வாக்கை பதிவு செய்யலாம்.

*இந்த முறையில் வாக்குச்சீட்டு மூலமாக மட்டுமே வாக்குப்பதிவு செய்யமுடியும். வாக்குப்பதிவு இயந்திரத்தில் வாக்குப்பதிவு செய்ய முடியாது.

வாக்காளரின் அடையாளத்தில் முகவருக்கு சந்தேகம் இருந்தால் என்ன செயல்முறை?

*வாக்காளரின் அடையாளத்தில் முகவருக்கு சந்தேகம் இருந்தால் வாக்குச்சாவடி தலைமை அலுவலர் விசாரணை நடத்துவார்.

*விசாரணை முடிவில், சந்தேகத்தில் உண்மை இல்லை என்றால் சம்பந்தபட்ட நபர் வாக்களிக்க அனுமதிக்கப்படுவார்.

*மாறாக சந்தேகம் உண்மையானால் காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்படுவார்.

நேரம் முடிந்த பின்னர் வாக்குச்சாவடிக்கு சென்றால் வாக்களிக்க முடியுமா?

*தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணிக்கு நிறைவடையும். மாலை 6 மணிக்கு முன்பு வருபவர்களுக்கு மட்டுமே டோக்கன் அளிக்கப்பட்டு அனுமதி வழங்கப்படும்.

விவிபேட் இயந்திரம் என்றால் என்ன?

*வாக்காளர் எந்த வேட்பாளருக்கு வாக்களித்தார் என்பதை அறிந்து கொள்ளும் இயந்திரம்தான் விவிபேட்

*ஒவ்வொரு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்துக்கும் ஒரு விவிபேட் இயந்திரம் இருக்கும்.

*வாக்கைச் செலுத்திய பின் யாருக்கு செலுத்தியுள்ளோம் என்பதற்கான விவரம் விவிபேட் இயந்திரத்தில் பதிவாகும்.

வாக்களித்ததற்கு மாறான தகவல்களை விவிபேட் காண்பித்தால் என்ன செய்யவேண்டும்?

*வேறு வேட்பாளருக்கு வாக்கு செலுத்தியதாக காண்பித்தால் வாக்குச்சாவடி தலைமை அலுவலரிடம் புகார் அளிக்க வேண்டும்.

*வாக்குப்பதிவு இயந்திரத்தில் வாக்கை பதிவு செய்து அலுவலர் சோதித்துப் பார்ப்பார்.

*தவறு நடந்தது உறுதி செய்யப்பட்டால் விவிபேட் இயந்திரம் மாற்றம் செய்யப்படும்

The post ஒரு விரல் புரட்சியே… மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடர்பான பல்வேறு சந்தேகங்களும் விடைகளும்!! appeared first on Dinakaran.

Related Stories: