இன்று முதல் 3 நாட்கள் விடுமுறை டாஸ்மாக் கடைகளில் அலைமோதிய கூட்டம்: நீண்ட வரிசையில் காத்திருந்து வாங்கிச் சென்றனர்

திருத்தணி: நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவை முன்னிட்டு டாஸ்மாக் கடைகளுக்கு இன்று முதல் 19ம் தேதி வரை 3 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழக எல்லைப் பகுதியில் அமைந்துள்ள ஆந்திரா மதுக் கடைகளும் மூடப்பட உள்ளன. இதனால் மதுப் பிரியர்கள் முன்னதாகவே 3 நாட்கள் தேவைக்கு ஏற்ப பதுபானம் வாங்கி வைத்துக்கொள்ள டாஸ்மாக் மதுக்கடைகளில் நேற்று குவிந்தனர்.

திருத்தணி, பள்ளிப்பட்டு, ஆர்.கே.பேட்டை, திருவாலங்காடு ஆகிய பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகள் பகல் 12 மணிக்கு திறக்கப்பட்டதும் மதுப் பிரியர்கள் ஆர்வத்துடன் கடைகளுக்கு படையெடுத்து மதுபானம் வாங்கிச் சென்றனர். இதனால் டாஸ்மாக் கடைகளில் வழக்கத்தை விட கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. மாலை 6 முதல் இரவு 10 மணிவரை டாஸ்மாக் கடைகளில் மதுப்பிரியர்கள் கூட்டம் அலைமோதியதால், நீண்ட வரிசையில் காத்திருந்து மதுபானம் வாங்கிச் சென்றனர்.

ஒருவருக்கு அதிக பட்சமாக 4 குவாட்டர் அல்லது 2 பீர் மட்டுமே வழங்க வேண்டும் என்று டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவிட்ட நிலையில் மதுப்பிரியர்கள் ஒன்றுக்கு இரண்டு முறை காத்திருந்து மது வாங்கிச் சென்றனர். 3 நாட்கள் தொடர் விடுமுறையின் போது மதுபானத்தை பதுக்கி கள்ள சந்தையில் விற்பனை செய்வதை தடுக்கும் வகையில் டாஸ்மாக் கடைகள் முன்பு போலீசார் கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டனர். கள்ள சந்தையில் மது விற்பனை நடைபெறுவது உறுதி செய்யப்பட்டால், சம்பந்தப்பட்டவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்று போலீசார் எச்சரித்துள்ளனர்.

* 230 மதுபாட்டில் பறிமுதல்
சென்னை வளசரவாக்கம் அடுத்த ராமாபுரம் கங்கை அம்மன் கோவில் தெருவில் உள்ள ஒரு வீட்டில் சட்ட விரோதமாக மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவது போலீசாருக்கு தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அந்த வீட்டில் நேற்று திடீர் சோதனை செய்தனர். அப்போது, வீட்டில் 230 மது பாட்டில்கள் பதுக்கி வைத்திருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர்.

இதையடுத்து சட்ட விரோதமாக மதுபானம் விற்பனை செய்த பிரதாப் (38) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும், வீட்டில் இருந்த 230 மது பாட்டில்கள், ஒரு ஆட்டோ ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும், வழக்குப்பதிந்து பிரதாப்பை பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

The post இன்று முதல் 3 நாட்கள் விடுமுறை டாஸ்மாக் கடைகளில் அலைமோதிய கூட்டம்: நீண்ட வரிசையில் காத்திருந்து வாங்கிச் சென்றனர் appeared first on Dinakaran.

Related Stories: