இதுவரை 440 எம்எல்ஏக்களை விலை கொடுத்து வாங்கியுள்ளனர்; விலைவாசி உயர்வு, வேலையின்மை பணவீக்கம்தான் பாஜவின் கேரண்டி: கார்கே பாய்ச்சல்

புதுச்சேரி தட்டாஞ்சாவடி ஒழுங்குமுறை விற்பனை கூட வளாகத்தில் நேற்று மதியம் நடந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கத்தை ஆதரித்து காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, கை சின்னத்துக்கு வாக்கு கேட்டு பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது:
புதுச்சேரிக்கு யூனியன் பிரதேசத்துக்கான அந்தஸ்தை வழங்கியது காங்கிரஸ். புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து உறுதியாக பெற்று தருவோம். பாஜ தேர்தல் அறிக்கையில், புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கொடுப்போம் என ஒரு வரியில்கூட குறிப்பிடவில்லை. இது ஒட்டுமொத்தமாக புதுச்சேரி மக்களை புறக்கணிக்கிறது என்பது தெளிவாக தெரிகிறது. புதுச்சேரியில் மூடப்பட்டுள்ள ஆலைகள், ரேஷன் கடைகள், கூட்டுறவு நிறுவனங்களை திறந்து வேலை கொடுப்போம். மோடி அரசு குறுக்கு வழியில் சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கி ஆட்சி அமைக்கின்றனர். இதுவரை 440 எம்எல்ஏக்களை விலை கொடுத்து வாங்கியுள்ளனர்.

பல்வேறு மாநிலங்களில் ஆட்சியை கவிழ்த்து சர்வாதிகாரத்தனமாக மோடி நடந்து கொள்கிறார். பாஜ கொள்கையை ஏற்காதவர்களை மிரட்டி தொல்லை கொடுத்து அடிபணிய வைக்கிறார்கள். புதுச்சேரியில் துணைநிலை ஆளுநரை வைத்து காங்கிரஸ் அரசுக்கு தொல்லை கொடுத்தார்களோ, அதேபோல் தமிழகத்தில் ஆளும் திமுக அரசுக்கு அங்குள்ள ஆளுநர் ரவியை வைத்து தொல்லை கொடுக்கின்றனர். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தை முடக்கும் வேலையை மோடி அரசு செய்து வருகிறது.

மோடியின் 10 ஆண்டு கால ஆட்சியில் ₹155 லட்சம் கோடி வெளிநாட்டில் இருந்து கடன் வாங்கியுள்ளார். இவர்களது ஆட்சியில் பொருளாதாரம் சீரழிந்து வருகிறது. 2 கோடி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு, விவசாயிகளுக்கு இரட்டிப்பு பணம் கொடுப்பதாக கூறினார். ஆனால் கொடுக்கவில்லை. இதிலிருந்து பிரதமர் பொய்யான வாக்குறுதிகளை கொடுத்திருக்கிறார் என தெளிவாகிறது.

மோடி இருந்தால் மக்களுக்கு எந்த நன்மையும் கிடைக்காது. காங்கிரஸ் ஆட்சியில் கொண்டு வந்த திட்டத்தை தான் செயல்படுத்தி வருகிறார். மோடி கேரண்டி மக்களிடத்தில் எடுபடவில்லை. அது ஒரு பொய்யான கேரண்டி. மோடியும், அமித்ஷாவும் மிகப்பெரிய வாஷிங்மெஷின் வைத்துள்ளனர். அவர்களுக்கு அடிபணிந்தவர்களை இந்த வாஷிங்மெஷினில் போட்டு சுத்தமா துடைத்து விடுகின்றனர். குற்ற சம்பவத்தில் ஈடுபட்டவர்களை எல்லாம் தங்களது கட்சியில் சேர்த்திருக்கிறார்கள். அதில் சேர்ந்தால் அவர்கள் எல்லோரும் புனிதமாகி விடுகிறார்கள். இதுதான் அவர்களது வேலை. மோடி கொடுத்த கேரண்டி எதையும் நிறைவேற்றவில்லை. பாஜ கட்சி ஊழலில் சிக்கியுள்ளது. மோடியின் கேரண்டி… பொய்யான கேரண்டி.

மக்கள் நம்பிக்கையை மோடி இழந்து விட்டார். மோடியின் கேரண்டி எது தெரியுமா? விலை வாசி உயர்வு, இளைஞர்களுக்கு வேலையில்லை, பணவீக்கத்துக்குத்தான் மோடி கேரண்டி கொடுத்திருக்கிறார். உங்களின் பாதுகாப்பு, அடிப்படை உரிமைகள், சுயமரியாதை ஜனநாயகம், இந்திய அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாக்க கை சின்னத்துக்கு வாக்களியுங்கள். இவ்வாறு அவர் கூறினார்.

‘தலையாட்டி பொம்மை ரங்கசாமி’
கார்கே பேசுகையில் ‘புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியை பார்த்து பரிதாப்படுகிறேன். அவரையும் செயல்படவிடவில்லை. சுதந்திரமாக செயல்பட விடாமல் மோடி அரசு கைக்குள் போட்டுக் கொண்டு, அவரை தலையாட்டி பொம்மைபோல் வைத்துள்ளனர்,’என்றார்.

The post இதுவரை 440 எம்எல்ஏக்களை விலை கொடுத்து வாங்கியுள்ளனர்; விலைவாசி உயர்வு, வேலையின்மை பணவீக்கம்தான் பாஜவின் கேரண்டி: கார்கே பாய்ச்சல் appeared first on Dinakaran.

Related Stories: