பல்லடத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேரை கொலை செய்த வழக்கில் 4 பேருக்கு ஆயுள்தண்டனை விதிப்பு..!!

திருப்பூர்: பல்லடத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேரை கொலை செய்த வழக்கில் 4 பேருக்கு ஆயுள்தண்டனை விதித்து திருப்பூர் மாவட்ட முதன்மை நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கள்ளக்கிணறு பகுதியில் வசித்து வந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மோகன்ராஜ்(49), அவரது சகோதர் செந்தில்குமார்(46), தாய் புஷ்பவதி(68), சித்தி ரத்தினாம்பாள்(59) ஆகிய நால்வரை கடந்த 3-ம் தேதி மாலை மர்ம நபர்கள் வெட்டிக் கொன்றனர்.

இதில், திருநெல்வேலி மாவட்டம் அரியநாயகி புரத்தைச் சேர்ந்த வெங்கடேஷ் என்ற ராஜ்குமார்(27), திருச்சி மாவட்டம் மணப்பாறையைச் சேர்ந்த செல்லமுத்து(24), தேனி மாவட்டம் உத்தமபாளையத்தைச் சேர்ந்த சோனை முத்தையா(22) ஐயப்பன் ஆகியோர் தாக்குதலில் ஈடுபட்டது தெரியவந்தது. இவர்களை பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு செல்லமுத்து முதலில் கைது செய்யப்பட்டார்.

திருப்பூர் வடக்கு போலீஸாரிடம் சரணடைந்த வெங்கடேஷ், சோனை முத்தையா,ஐயப்பன் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில் இந்த வழக்கு திருப்பூர் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது, வழக்கை விசாரித்த நீதிபதி ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேரை கொலை செய்த வழக்கில் 4 பேருக்கு ஆயுள்தண்டனை விதித்து உத்தரவிட்டார்.

மேலும் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 5 பேரில் 4 பேருக்கு ஆயுள் தண்டனையும் ஒருவருக்கு 6 ஆண்டு சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது. கொலைவழக்கில் வெங்கடேஷ், செல்லமுத்து, சோனை முத்தையா, அய்யப்பன் ஆகிய 4 பேருக்கு ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டு. செல்வம் என்பவருக்கு மட்டும் 6 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திருப்பூர் மாவட்ட முதன்மை நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

The post பல்லடத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேரை கொலை செய்த வழக்கில் 4 பேருக்கு ஆயுள்தண்டனை விதிப்பு..!! appeared first on Dinakaran.

Related Stories: