ஷேர் மார்க்கெட்டில் முதலீடு செய்யக் கூறி தொழிலதிபரிடம் மோசடி: புதுவையில் 4 பேரிடம் ரூ.1.53 கோடி அபேஸ்

 

புதுச்சேரி, ஏப். 15: புதுச்சேரியை சேர்ந்த தொழிலதிபர் ராமமூர்த்தி என்பவரின் வாட்ஸ்அப் எண்ணுக்கு ஒரு மெசேஜ் வந்தது. அதில் ஷேர் மார்க்கெட்டில் முதலீடு செய்தால் அதிக லாபம் பெறலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில் இதனை நம்பி அவர் ரூ.1 கோடியே 52 லட்சத்து 40 ஆயிரம் முதலீடு செய்துள்ளார். பிறகு அவரது ஷேர் மார்க்கெட் அக்கவுண்டில் வந்த பணத்தை எடுக்க முயன்றபோது அவற்றை எடுக்க முடியவில்லை. அவரது அக்கவுண்ட் இணையவழி மோசடிக்காரர்களால் முடக்கப்பட்டுவிட்டது.

இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அவர் புதுச்சேரி சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதேபோன்று புதுச்சேரி ரத்தினவேல் என்பவர் சிமெண்ட் பேக்ஸ் ஆர்டர் செய்வதற்காக கூகுலில் தேடியபோது அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர் தொடர்பு கொண்டு தான் சப்ளை செய்வதாக தெரிவித்துள்ளார். இதனை நம்பி ரத்தினவேல் ரூ.53 ஆயிரத்தை ஆன்லைன் மூலமாக செலுத்தியுள்ளார்.

பிறகு சிமெண்ட் பேக் சப்ளை செய்யவில்லை. அவர்களிடமிருந்து பணமும் திரும்ப கிடைக்கவில்லை. மேலும் கஜேந்திரன் என்பவரின் வங்கி கணக்கில் இருந்து அவருக்கு தெரியாமல் ரூ.30 ஆயிரம் திருடு போனது. பிறகு அதே போன்று அரிகரன் என்பவரின் டெபிட் கார்டு மூலம் அவரின் அனுமதியின்றி ரூ.12 ஆயிரத்து 920 திருடு போனது. இணைவழி மோசடிக்கார்களின் இந்த மோசடியால் அதிர்ச்சியடைந்த அவர்கள் புதுச்சேரி சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தனர். இதுசம்பந்தமாக இன்ஸ்பெக்டர் கீர்த்தி விசாரணை நடத்தி வருகிறார்.

The post ஷேர் மார்க்கெட்டில் முதலீடு செய்யக் கூறி தொழிலதிபரிடம் மோசடி: புதுவையில் 4 பேரிடம் ரூ.1.53 கோடி அபேஸ் appeared first on Dinakaran.

Related Stories: