ஸ்டாலினின் தேர்தல் வியூகம் மோடியை நடுங்க வைத்துள்ளது; திருமாவளவன் பேச்சு

அரியலூர்: அரியலூர் அண்ணா சிலை அருகே சிதம்பரம் தொகுதி விசிக வேட்பாளர் தொல்.திருமாவளவன் நேற்று பேசியது: தேசிய அளவில் திமுக தலைவர் ஸ்டாலின் தேர்தல் வியூகத்தை அமைத்துள்ளார். இந்த தேர்தல் வியூகம் வெற்றி பெற வேண்டும். இது இந்திய அரசியல் வரலாற்றில் பேசப்படும் ஒன்றாக அமைய உள்ளது. இந்த தேர்தல் இந்திய மக்களுக்கும், சங்பரிவார் கும்பலுக்கும் நடக்கும் தர்மயுத்தம். கருத்தியல் போர். இதில் மக்கள் வெற்றி பெற வேண்டும். மக்களுக்கு இந்தியா கூட்டணி துணை நிற்கும்.

நமது முதல்வர் எடுத்துள்ள இந்த தேர்தல் வியூகம், மோடி, அமித்ஷாவை நடுங்க வைத்துள்ளது. அதனால் தான் அகில இந்திய கட்சியான காங்கிரஸ் கட்சியைவிட, கம்யூனிஸ்ட் கட்சிகளை விட, திமுகவை அதிகம் எதிர்க்கின்றார்.
மோடி தனக்கு தமிழ் பிடிக்கும் என்கிறார். இட்லி பிடிக்கும் என்கிறார். இந்த நாடகம் எல்லாம் எதற்காக?. திமுக தேர்தல் கால கட்சி அல்ல. தமிழனத்தின் காப்பாளர். எனவே எனக்கு வாக்களியுங்கள், என்னை வெற்றி பெற செய்யுங்கள் என கேட்பதைவிட திமுக தலைவர் வகுத்துள்ள வியூகத்தை வெற்றி பெற செய்யுங்கள் என கேட்கிறேன். முதல்வரின் இலக்கு நிறைவேற வேண்டும். மோடியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும். பாஜகவை தூக்கி எறிய வேண்டும். நாம் ஸ்டாலினுக்கு துணையாக இருக்க வேண்டும் என பேசினார்.

 

The post ஸ்டாலினின் தேர்தல் வியூகம் மோடியை நடுங்க வைத்துள்ளது; திருமாவளவன் பேச்சு appeared first on Dinakaran.

Related Stories: