சாயக்கழிவு பிரச்னைக்கு தீர்வு காண நவீன சுத்திகரிப்பு ஆலை அமைக்கப்படும் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும்

ஈரோடு, ஏப். 14: ஈரோட்டில் சாலை, மேம்பாலம் உள்பட அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஈரோடு தொகுதி அதிமுக வேட்பாளர் ஆற்றல் அசோக்குமார் உறுதியளித்துள்ளார்.

ஈரோடு நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் ஆற்றல் அசோக்குமார் நேற்று ஈரோடு சம்பத்நகர், வெட்டுக்காட்டுவலசு, குமலன்குட்டை, வீரப்பன்சத்திரம், பெரியவலசுநால்ரோடு, எம்ஜிஆர் வீதி, அப்பன்நகர், நேருவீதி, மணிக்கூண்டு, ஈஸ்வரன்கோயில் வீதி, கருங்கல்பாளையம், கிருஷ்ணம்பாளையம், அக்ரஹாரவீதி, அசோகபுரம், முனிசிபல்காலனி, பாப்பாத்திகாடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அதிமுக மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் வீதி வீதியாக சென்று வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார்.

அப்போது வாக்காளர்களிடம் ஆற்றல் அசோக்குமார் பேசியதாவது:
ஈரோட்டில் போக்குவரத்து நெரிசல்களை குறைக்க சாலைகள் விரிவாக்கம் செய்யப்படுவதோடு, மேம்பாலம் விரிவுபடுத்தப்படும். ஏற்கனவே, அதிமுக ஆட்சிகாலத்தில் தற்போதுள்ள அரசு மருத்துவமனை மேம்பாலமானது பெருந்துறை சாலையில் திண்டல் வரை விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இதேபோல், ஈவிஎன் சாலையில் உள்ள மேம்பாலமானது ரயில்நிலையம், சென்னிமலை சாலையை இணைக்கும் வகையில் விரிவுபடுத்தப்படும். வளர்ந்து வரும் நகரமான ஈரோட்டில் சாலைகள் உள்பட அடிப்படை கட்டமைப்புகள் மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். அதிமுக ஆட்சிகாலத்தில் கொண்டு வரப்பட்ட ஊராட்சிக்கோட்டை குடிநீர் திட்டமானது மாநகராட்சியின் அனைத்து பகுதிகளுக்கும் விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும், மாநகராட்சியையொட்டி உள்ள பகுதிகளுக்கும் விரிவுபடுத்தப்படும். இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கும் வகையில் பல்வேறு திட்டங்கள் கொண்டு வரப்படும். மாணவர்கள், இளைஞர்களுக்காக விளையாட்டு மைதானங்கள் ஆங்காங்கே கொண்டு வரப்படும். விவசாயிகள், வியாபாரிகள் பயன்பெறும் வகையில் ஒருங்கிணைந்த மஞ்சள் வணிக வளாகம் அமைக்கப்படும்.
ஈரோட்டில் நிலவி வரும் கழிவு நீர் பிரச்னைக்கு பொதுசுத்தகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டு உரிய தீர்வு காணப்படும். இளைஞர்களுக்கான திறன்மேம்பாட்டு மையங்கள் தொடங்கப்படும். எனவே இரட்டை இலை சின்னத்திற்கு வாக்காளர்கள் ஆதரவளிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

வாக்குசேகரிப்பின் போது முன்னாள் அமைச்சர் கே.வி.ராமலிங்கம், முன்னாள் எம்எல்ஏ தென்னரசு, வீரப்பன்சத்திம் பகுதி செயலாளர் கேசவமூர்த்தி, ஜெ.பேரவை மாநில துணை செயலாளர் வீரகுமார், மாவட்ட இணை செயலாளர் ஆவின் ராஜேந்திரன், வார்டு செயலாளர் சந்தானம், முன்னாள் மேயர் மல்லிகா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

The post சாயக்கழிவு பிரச்னைக்கு தீர்வு காண நவீன சுத்திகரிப்பு ஆலை அமைக்கப்படும் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும் appeared first on Dinakaran.

Related Stories: