100 சதவீத வாக்குப்பதிவு குறித்து ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் மலர்களை கொண்டு விழிப்புணர்வு

ஊட்டி : நாடாளுமன்ற தேர்தலில் 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தி மலர் அலங்காரங்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. நீலகிரி மாவட்டம் ஊட்டி அரசினர் தாவரவியல் பூங்காவில்,எதிர் வரும் நாடாளுமன்ற பொதுத் தேர்தல் 2024-ஐ முன்னிட்டு, 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து மலர் தொட்டிகளால் வடிவமைக்கப்பட்ட தேர்தல் தொடர்பான விழிப்புணர்வு வடிவங்களை பார்வையிட்ட மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட கலெக்டர் அருணா வாக்குபதிவு நாளன்று தவறாமல் வாக்களிக்குமாறு கேட்டு கொண்டார். இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, வாக்காளர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் அனைத்து பகுதிகளிலும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

குறிப்பாக இளம் வாக்காளர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர்கள் உள்ளிட்ட அனைத்து வாக்காளர்களும் நடைபெறவுள்ள நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் வாக்குகளை பதிவு செய்ய வேண்டும் என்பதனை வலியுறுத்தியும்,அவர்களிடையே வாக்களிப்பதன் அவசியம் குறித்து, விழிப்புணர்வு ஏற்படுத்தவும் பல்வேறு நிகழ்ச்சிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அந்த வகையில் ஊட்டி அரசினர் தாவரவியல் பூங்காவில், எதிர்வரும் நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சுமார் 240 மலர் தொட்டிகளால் வாக்குப்பதிவு நாளான \”ஏப்ரல் 19\”, \”தேர்தல் ஆணைய லோகோ\”, \”VOTE 100%\”, \”கையில் மை\” உள்ளிட்ட வடிவங்களில் அலங்காரங்கள் செய்யப்பட்டிருந்தது.

மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட கலெக்டர் அருணா நேரில் பார்வையிட்டு புகைப்படம் எடுத்துக் கொண்டு, தாவரவியல் பூங்காவிற்கு வருகை புரிந்த சுற்றுலா பயணிகளிடம் வாக்குபதிவு நாளன்று சுற்றுலா செல்வதை தவிர்த்து அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

இந்நிகழ்வில், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) கௌசிக், தேர்தல் விழிப்புணர்வு பொறுப்பு அலுவலர் மற்றும் ஆவின் பொது மேலாளர் ஜெயராமன், தோட்டக்கலைத்துறை இணை இயக்குநர் ஷிபிலா மேரி, மாவட்ட சமூக நல அலுவலர் பிரவீணா தேவி, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலர் (பொ) ஷோபனா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

The post 100 சதவீத வாக்குப்பதிவு குறித்து ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் மலர்களை கொண்டு விழிப்புணர்வு appeared first on Dinakaran.

Related Stories: