தொடர்ந்து உச்சத்தில் தங்கம் விலை சவரன் ரூ.54 ஆயிரத்தை தாண்டியது

சென்னை: தங்கம் விலை நேற்று அதிரடியாக ரூ.640 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.54 ஆயிரத்தை தாண்டியது. தொடர்ந்து தங்கம் விலை அதிகரித்து புதிய உச்சத்தை தொட்டு வருவது நகை வாங்குவோரை மேலும், மேலும் அதிர்ச்சியடைய செய்து வருகிறது. தங்கம் விலை கடந்த மாதம் இறுதியில் இருந்து ஒவ்வொரு நாளும் புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. ஒரு சமயத்தில் தினசரி சவரன் ரூ.1000 என்ற அளவிலும் உயர்ந்ததை பார்க்க முடிந்தது. அதாவது கடந்த மாதம் 28ம் தேதி தங்கம் விலை ஒரு சவரன் ரூ.50 ஆயிரத்தை தொட்டது. 29ம் தேதி சவரன் ரூ.51 ஆயிரத்தை கடந்தது. 3ம் தேதி சவரன் ரூ.52 ஆயிரத்தை தொட்டது. அதன் பிறகும் தங்கம் விலை ரூ.300, ரூ.400, ரூ.500 என்று தினம், தினம் அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்த நிலையில் கடந்த 8ம் தேதி ஒரு சவரன் ரூ.53 ஆயிரத்தை தாண்டியது.

அன்றைய தினம் சவரன் ரூ.53,280க்கு விற்கப்பட்டது. இதன் பிறகு தங்கம் விலை குறைந்தபாடில்லை. தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 9ம் தேதி சவரன் ரூ.53,360, 10ம் தேதி ரூ.53,640, 11ம் தேதி (நேற்று முன்தினம்) சவரன் ரூ.53,800க்கும் விற்கப்பட்டது. நேற்று தங்கம் விலை மேலும் அதிரடியாக உயர்ந்தது. அதாவது, நேற்று ஒரு நாளில் மட்டும் தங்கம் விலை கிராமுக்கு ரூ.80 உயர்ந்து ஒரு கிராம் ரூ.6,805க்கும், சவரனுக்கு ரூ.640 உயர்ந்து ஒரு சவரன் ரூ.54,440க்கு விற்கப்பட்டது. அதே நேரத்தில் தங்கம் விலை வரலாற்றில் அதிகபட்ச விலை என்ற புதிய உச்சத்தையும் தொட்டது. இந்த விலையேற்றம் நகை வாங்குவோரை மேலும், மேலும் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது. அதே நேரத்தில் சவரன் ரூ.55 ஆயிரத்தை ஓரிரு நாளில் கடந்து விடுமோ ஏன்ற ஏக்கம் நகை வாங்குவோர் இடையே இருந்து வருகிறது. இதற்கிடையே, தங்கம் விலை வரும் நாட்களில் இன்னும் அதிகரிக்க தான் வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் கூறினர்.

The post தொடர்ந்து உச்சத்தில் தங்கம் விலை சவரன் ரூ.54 ஆயிரத்தை தாண்டியது appeared first on Dinakaran.

Related Stories: