விக்கிரவாண்டி தொகுதி காலியாக இருப்பதாக சட்டப்பேரவை செயலகம் அறிவிப்பு

 

சென்னை: விக்கிரவாண்டி தொகுதி காலியாக இருப்பதாக சட்டப்பேரவை செயலகம் அறிவித்துள்ளது. விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதி திமுக எம்எல்ஏ புகழேந்தி உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். இதையடுத்து அவரது உடலுக்கு 21 குண்டுகள் முழங்கப்பட்டு முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. புகழேந்தி எம்எல்ஏவின் மறைவால் விக்கிரவாண்டி சட்டசபை தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. பொதுவாக ஒரு தொகுதியின் எம்எல்ஏ மரணமடைந்தால் அல்லது பதவியை ராஜினாமா செய்தால் அடுத்த 6 மாதத்தில் இடைத்தேர்தல் நடத்தப்படும்.

அந்த வகையில் அடுத்த 6 மாதத்துக்குள் விக்கிரவாண்டி தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் விக்கிரவாண்டி தொகுதி காலியாக இருப்பதாக சட்டப்பேரவை செயலகம் அறிவித்துள்ளது. விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதி காலியானதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்து சட்டப்பேரவை செயலகம் தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் அனுப்பியுள்ளது. மக்களவை தேர்தல் தமிழ்நாட்டில் வரும் 19ம் தேதி நடக்க உள்ள நிலையில், குறைவான நாட்களே இருப்பதால் விக்கிரவாண்டியில் இடைத்தேர்தல் அதே தேதியில் நடத்த வாய்ப்பு குறைவாகவே உள்ளது. இடைத்தேர்தல் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

The post விக்கிரவாண்டி தொகுதி காலியாக இருப்பதாக சட்டப்பேரவை செயலகம் அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: