விறகு சேகரித்த மூதாட்டிக்கு வெட்டு தம்பதி மீது வழக்கு

அருமனை, ஏப்.7: ரப்பர் தோட்டத்தில் விறகு சேகரித்த மூதாட்டியிடம் தகராறு செய்து அரிவாளால் வெட்டி, கம்பால் தாக்கிய தம்பதி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அருமனை அருகே குழிச்சல் பகுதியை சேர்ந்தவர் ஞானமுத்து. அவரது மனைவி ரஞ்சிதம் (66). நேற்று முன்தினம் அவர் அருகில் இருந்த ரப்பர் தோட்டத்தில் விறகு சேகரித்து கொண்டிருந்தார். அப்போது பக்கத்து வீட்டில் வசிக்கும் நபர்களும் விறகு சேகரிக்க வந்திருக்கிறார்கள்.
குழிச்சல் பகுதியை சார்ந்த பாக்கியநாதன் (58) தனது மனைவி சாந்தகுமாரி ஆகியோரும் விறகு சேகரித்தனர். அதில் ரஞ்சிதம் சேகரித்து வைத்திருந்த விறகுகளை அவர்கள் இருவரும் எடுத்துச் சென்றதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக அவர்களுக்குள்ளே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதில் ஆத்திரமடைந்த பாக்கியநாதன், கையில் வைத்திருந்த வெட்டுக்கத்தியால் ரஞ்சிதம் கழுத்தை நோக்கி வெட்ட முயன்றார். அப்போது தடுத்தபோது ரஞ்சிதத்தின் கையில் வெட்டு விழுந்தது. அதுமட்டுமல்லாமல் பாக்கியநாதன் மனைவி சாந்தகுமாரியும் விறகு கட்டையால் மூதாட்டியை தாக்கி உள்ளார். இதில் படுகாயமடைந்த ரஞ்சிதத்தை அங்கிருந்தவர்கள் மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் ரஞ்சிதம் அனுமதிக்கபட்டு சிகிச்சை பெற்றுவருகிறார். இதுகுறித்து ரஞ்சிதம் அளித்த புகாரின்பேரில் பாக்கியநாதன், சாந்தகுமாரி மீது அருமனை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

The post விறகு சேகரித்த மூதாட்டிக்கு வெட்டு தம்பதி மீது வழக்கு appeared first on Dinakaran.

Related Stories: