ஆயிரம் மதுபாட்டில்கள் பறிமுதல்

 

சேலம், ஏப்.6: சேலம் அம்மாபேட்டையில் வீட்டில் பதுக்கி வைத்து விற்பனை செய்த ஆயிரம் மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்து மூதாட்டியை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள அவரது மகனை தேடி வருகின்றனர்.சேலம் அம்மாபேட்டை பகுதியில் சந்துக்கடை மூலமாக கூடுதல் விலைக்கு மதுபானம் விற்பனை செய்யப்பட்டு வருவதாக அம்மாபேட்டை இன்ஸ்பெக்டர் பால்ராஜிற்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் ரகசியமாக கண்காணித்து வந்தனர்.

இந்நிலையில் அம்மாபேட்டை கிருஷ்ணன்நகரில் உள்ள வீட்டில் மதுபானங்கள் இருப்பதாக தகவல் கிடைத்தது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் பால்ராஜ், எஸ்ஐ மோனிகா மற்றும் போலீசார் அந்த வீட்டில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது அங்கு 11 வகையான ஆயிரத்திற்கும் மேற்பட்ட மதுபாட்டில்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது.

தொடர்ந்து விசாரித்ததில் பச்சப்பட்டி மெயின்ரோட்டை சேர்ந்த காமராஜ்(40) என்பவர், டாஸ்மாக் கடைகளில் இருந்து மொத்தமாக மதுபாட்டில் வாங்கி வந்து வீட்டில் பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து வீட்டில் இருந்த காமராஜின் தாய் சாந்தாவை(60) போலீசார் கைது செய்தனர். மேலும் அங்கிருந்த 3 லட்சத்து 11ஆயிரம் ரூபாய் மதிப்பிலான மதுபாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டது. தலைமறைவாக உள்ள காமராஜை போலீசார் தேடி வருகின்றனர்.

The post ஆயிரம் மதுபாட்டில்கள் பறிமுதல் appeared first on Dinakaran.

Related Stories: