கொசுவர்த்தியில் இருந்து தீப்பொறி குடிசை வீடு தீப்பிடித்து முதியவர் பலி

புழல்: செங்குன்றம் அருகே குடிசை வீடு தீப்பிடித்து எரிந்ததில் முதியவர் பரிதாபமாக உயிரிழந்தார். செங்குன்றம் அடுத்த எடப்பாளையம் திருவள்ளூர் நெடுஞ்சாலை பகுதியைச் சேர்ந்தவர் பிச்சைமணி (80). இவர் குடிசை வீட்டில் வசித்து வந்தார். அருகில் உள்ள கோயிலில் பகல் நேரத்தில் தங்கிவிட்டு, இரவில் குடிசை வீட்டில் தூங்குவது வழக்கம். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் குடிசை வீட்டில் கொசுவர்த்தியை பற்றவைத்துவிட்டு பிச்சைமணி தூங்கிக் கொண்டிருந்தாராம். அப்போது, எதிர்பாராதவிதமாக கொசுவத்தியில் இருந்த தீப்பொறியால் குடிசையில் தீப்பிடித்து எரிந்தது.

இதனைக் கண்ட பொதுமக்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். மேலும், தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் தெரிவித்தனர். இதனிடையே குடிசை வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த பிச்சைமணி தீயில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த ஆவடி தீயணைப்பு நிலைய காவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். மேலும், சம்பவ இடத்திற்கு வந்த சோழவரம் போலீசார் பிச்சுமணியின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

The post கொசுவர்த்தியில் இருந்து தீப்பொறி குடிசை வீடு தீப்பிடித்து முதியவர் பலி appeared first on Dinakaran.

Related Stories: