328 ரன் வித்தியாசத்தில் இலங்கை அபார வெற்றி: 5 விக்கெட் வீழ்த்திய கசுன் ரஜிதா

சிலெட்: வங்கதேச அணியுடனான முதல் டெஸ்டில், இலங்கை அணி 328 ரன் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது. சிலெட் சர்வதேச ஸ்டேடியத்தில் நடந்த இப்போட்டியின் முதல் இன்னிங்சில் இலங்கை 280 ரன் குவித்தது (கேப்டன் தனஞ்ஜெயா 102, கமிந்து மெண்டிஸ் 102). வங்கதேசம் முதல் இன்னிங்சில் 188 ரன்னுக்கு சுருண்டது. 92 ரன் முன்னிலையுடன் 2வது இன்னிங்சை விளையாடிய இலங்கை 418 ரன் குவித்து ஆல் அவுட்டானது (கருணரத்னே 52, தனஞ்ஜெயா 108, கமிந்து மெண்டிஸ் 164). இதைத் தொடர்ந்து, 511 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய வங்கதேசம், 3ம் நாள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 47 ரன் எடுத்திருந்தது (13 ஓவர்). மோமினுல் 7, தைஜுல் 6 ரன்னுடன் நேற்று 4வது நாள் ஆட்டத்தை தொடங்கினர்.

தைஜுல் மேற்கொண்டு ரன் எடுக்காமல் வெளியேற, மோமினுல் – மிராஸ் 7வது விக்கெட்டுக்கு 66 ரன் சேர்த்தனர். மிராஸ் 33, ஷோரிபுல் 2 ரன் எடுக்க, காலித் அகமது, நஹித் ராணா டக் அவுட்டாகினர். வங்கதேசம் 2வது இன்னிங்சில் 182 ரன் எடுத்து ஆட்டமிழந்தது (49.2 ஓவர்). பொறுப்புடன விளையாடிய மோமினுல் 87 ரன்னுடன் (148 பந்து, 12 பவுண்டரி, 1 சிக்சர்) ஆட்டமிழக்காமல் இருந்தார். இலங்கை தரப்பில் கசுன் ரஜிதா 14 ஓவரில் 1 மெய்டன் உள்பட 56 ரன் விட்டுக்கொடுத்து 5 விக்கெட் கைப்பற்றினார். விஷ்வா 3, லாகிரு குமாரா 2 விக்கெட் அள்ளினர். 328 ரன் வித்தியாசத்தில் அபாரமாக வென்ற இலங்கை 1-0 என முன்னிலை வகிக்க, கடைசி டெஸ்ட் மார்ச் 30ம் தேதி சட்டோகிராமில் தொடங்குகிறது.

The post 328 ரன் வித்தியாசத்தில் இலங்கை அபார வெற்றி: 5 விக்கெட் வீழ்த்திய கசுன் ரஜிதா appeared first on Dinakaran.

Related Stories: