கருத்து வேறுபாடால் பிரிந்திருந்த நிலையில் கத்தியை காட்டி மனைவியை மிரட்டிய கணவருக்கு சரமாரி வெட்டு: மது போதையில் சென்றதால் விபரீதம், மனைவியின் சகோதரி கைது

கும்மிடிப்பூண்டி: கருத்து வேறுபாடால் பிரிந்திருந்த நிலையில் மனைவியை பார்க்க மது போதையில் சென்றிருந்த கணவருக்கு மனைவியின் சகோதரியால் சரமாரி வெட்டு விழுந்தது. சென்னை அருகே செங்குன்றம் அடுத்த விஜயநல்லூர் பகுதியை சேர்ந்தவர் நந்தகுமார்(32). கூலித்தொழிலாளி. இவரது மனைவி மேனகா. இந்த தம்பதிக்கு இடையே கடந்த சில மாதங்களாக கருத்து வேறுபாடு ஏற்பட்டு, கும்மிடிப்பூண்டி அருகே உள்ள எளாவூர், துராபள்ளம் கிராமத்தில் உள்ள தாய்வீட்டில் மேனகா வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில், தனது மனைவியை பார்த்து பேசுவதற்கு நேற்றுமுன்தினம் துராபள்ளம் பகுதிக்கு கணவர் நந்தகுமார் சென்றுள்ளார். பின்னர் அன்று மாலை மதுபோதையில் மேனகாவிடம் கணவர் கடும் வாய்த்தகராறில் ஈடுபட்டுள்ளார். இதைத் தொடர்ந்து கணவன்-மனைவிக்கு இடையே வாக்குவாதம் முற்றியது. இதில் ஆத்திரமான கணவர் நந்தகுமார், அங்கிருந்த கத்தியை எடுத்து மனைவி மேனகாவை குத்த முயற்சித்துள்ளார்.

இதை மேனகாவின் மூத்த சகோதரி அம்பிகா தடுத்தபோது, அவரது கையை நந்தகுமார் வைத்திருந்த கத்தி கிழித்ததில் காயம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமான மற்றொரு சகோதரி ஷோபனா(28), நந்தகுமாரிடம் இருந்த கத்தியைப் பிடுங்கி, அதே கத்தியால் அவரது பின்னந்தலையில் சரமாரி வெட்டினார்.

இதில் படுகாயம் அடைந்த நந்தகுமாரை அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு, சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்த புகாரின்பேரில் ஆரம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, நந்தகுமாரை கத்தியால் சரமாரி வெட்டிய ஷோபனாவை கைது செய்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

The post கருத்து வேறுபாடால் பிரிந்திருந்த நிலையில் கத்தியை காட்டி மனைவியை மிரட்டிய கணவருக்கு சரமாரி வெட்டு: மது போதையில் சென்றதால் விபரீதம், மனைவியின் சகோதரி கைது appeared first on Dinakaran.

Related Stories: