சிறுகனூரில் முதல்வர் பங்கேற்கும் தேர்தல் பிரசார பொதுக்கூட்ட மேடை

 

சமயபுரம், மார்ச் 22: திருச்சி சிறுகனூரில் இன்று தமிழக முதல்வர் பங்கேற்கவுள்ள நாடாளுமன்ற வேட்பாளர்கள் அறிமுக கூட்டத்திற்கான மேடை அமைக்கும் பணியை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேற்று பார்வையிட்டார். நாடாளுமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல்19ம் தேதி நடைபெற உள்ளது. திருச்சி மற்றும் புதுச்சேரியில் திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு உள்ளனர்.

இதில் பெரம்பலூர் தொகுதியில் அருண்நேரு, திருச்சி தொகுதியில் மதிமுக சார்பில் துரை வைகோ ஆகியோர் போட்டியிடுகின்றனர். இந்நிலையில் திருச்சி, பெரம்பலூர் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் திருச்சி சிறுகனூரில் இன்று நடைபெறுகிறது.
திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்து பேசுகிறார்.

இன்று மாலை 4 மணியளவில் சிறுகனூரில் உள்ள பகத்சிங் திடலில் இக்கூட்டம் நடைபெறுகிறது. பொதுக்கூட்டத்திற்கான பந்தல் அமைக்கும் முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் நேற்று பொதுக்கூட்ட மைதானத்தில் தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், பள்ளிக் கல்வித் துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி நேரில் சென்று பார்வையிட்டார். அமைச்சருடன், மாநகர திமுக செயலாளர் மதிவாணன், மாவட்ட துணைச் செயலாளர் செங்குட்டுவன் ஆகியோர் உடன் சென்றனர்.

The post சிறுகனூரில் முதல்வர் பங்கேற்கும் தேர்தல் பிரசார பொதுக்கூட்ட மேடை appeared first on Dinakaran.

Related Stories: