திண்டுக்கல் அருகே தமிழ்ப் பல்கலை மாணவர்களால் மரத்தாலான தூண் கண்டுபிடிப்பு

தஞ்சாவூர் : தமிழ்ப் பல்கலைக்கழகக் கடல்சார் வரலாறு மற்றும் கடல்சார் தொல்லியல்துறையில் முதுகலைத் தொல்லியல் மாணவர்கள் கடந்த 14ம் தேதி திண்டுக்கல், கசவனம்பட்டி அருகே உள்ள கோனூரில் கள ஆய்வு செய்தனர். துறை மாணவி மௌனிகாஸ்ரீ அடையாளப்படுத்திய நடுகற்களையும் மரத்தாலான நினைவுத் தூணையும் துறையின் தலைவர் முனைவர் செல்வகுமார், கௌரவ உதவிப்பேராசிரியர் கௌரிசங்கர் ஆய்வு செய்தனர். அங்கு இருந்த ஓர் அரிய மரத்தாலான நினைவுத் தூணைப் பார்வையிட்டனர்.

சுமார் 300 ஆண்டுகள் பழமையான இம் மர நினைவுத்தூண் ஒரு வீரனின் நினைவாக உருவாக்கப்பட்டிருக்கலாம். இது தொடர்பான தெளிவான தகவல் தெரியவில்லை என உள்ளூர் மக்கள் கூறுகின்றனர். சதுர வடிவில் உள்ள சுமார் 182 செமீ உயரமும் x 20 செமீ x 17.5 செமீ நீளம், அகலமுள்ள இத்தூண் நான்கு பக்கங்களிலும் 7 சதுர வடிவக் கட்டகங்களில் பல சிற்பங்களைக் கொண்டுள்ளது.

இத்தூண் அமைந்துள்ள கோயில் அமைப்பு மரம், புற்களால் வேயப்பட்டு பழமை மாறாமல் இருப்பது இதன் சிறப்பாகும். கோனூரில் பழங்கால ஊர் இருந்ததற்கான தொல்லியல் சான்றுகளும் கிடைக்கின்றன. கோனூர் என்ற ஊரின் பெயரும் மேய்ச்சல் சமூகத்தை நினைவூட்டுகிறது.இவ்வூரில் உள்ளது போன்ற மரத்தாலான நினைவுத்தூண்கள் அரிதானவை எனத் தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தர், திருவள்ளூவன் கூறினார். மேலும் அவர் துறைமாணவர்களுக்கு கள ஆய்வுப் பயிற்சியும் புதிய தொல்லியல் சின்னங்களைக் கண்டுபிடிக்கவும் பயிற்சி அளிக்கப்படுகிறது என கூறினார்.

The post திண்டுக்கல் அருகே தமிழ்ப் பல்கலை மாணவர்களால் மரத்தாலான தூண் கண்டுபிடிப்பு appeared first on Dinakaran.

Related Stories: