பெங்களூரு அணியின் பயிற்சி முகாம் ஏற்கனவே தொடங்கிய நிலையில் மேக்ஸ்வெல் உள்ளிட்ட வெளிநாட்டு வீரர்கள் இணைந்துள்ளனர். ஆனால் நட்சத்திர வீரர் விராட் கோஹ்லி குறித்து இதுவரை எந்த தகவலும் இல்லை. கோஹ்லி-அனுஷ்கா தம்பதியினருக்கு 2வதாக ஆண் குழந்தை பிறந்த நிலையில் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து விலகிய கோஹ்லி ஐபிஎல் தொடரில் முழுமையாக ஆடுவாரா என்பதை அணி நிர்வாகமோ, கோஹ்லியோ இதுவரை உறுதிபடுத்தப்படவில்லை. ஐபிஎல் விளம்பரத்திலும் கோஹ்லி இல்லை. இருப்பினும் ஐசிசி டி.20 உலக கோப்பை தேர்வுக்கான ஒரே பாதையாக ஐபிஎல் மட்டுமே இருப்பதால் கோஹ்லி கண்டிப்பாக ஐபிஎல்லில் விளையாடியாக வேண்டும்.
இதுபற்றி பிசிசிஐ நிர்வாகி ஒருவர் கூறுகையில், “எங்களுக்குத் தெரிந்தவரை, அவர் ஐபிஎல் விளையாடுவார். ஆனால் விராட் எப்போது அணியில் இணைவார் என்பது அவரையும், அவரது அணியின் உரிமையையும் பொறுத்தது. அவர் ஓய்வில் இருப்பதால் நாங்கள் அவரிடம் எதுவும் கேட்கவில்லை. நிச்சயமாக, டி.20 உலக கோப்பைக்கு வீரர்களை தேர்ந்தெடுப்பதில் ஐபிஎல் பெரும் பங்கு வகிக்கும்” என்றார். பெங்களூரு முதல் போட்டியில் சென்னையை எதிர்கொள்ளும் நிலையில் அதற்கு இன்னும் ஒரு வாரம் இருப்பதால் கோஹ்லி அதற்கு முன் அணியுடன் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
The post ஐபிஎல் தொடரில் கோஹ்லி ஆடுவாரா? இதுவரை எந்த தகவலும் இல்லை appeared first on Dinakaran.